Thursday, February 26, 2009

பிளவு பட்ட உதடும் தமிழகமும்

பிளவுபட்ட உதட்டுடன் பிறந்த குழந்தையின் உணர்வுகளை வெளிப்படுத்திய திரைப்படத்திற்கு ஆஸ்கர்விருது வழங்கிப்பாராட்டி வருகின்றோம். இந்த நேரத்தில் தமிழகத்தில் நடைப் பெற்றுவரும் சப்தமில்லா சாதனை ஒன்றை பகிர்ந்துகொள்ளவிளைகின்றேன்.

தமிழ் அரசின் சார்பாக பிளவுபட்ட உதடு மற்றும் பிளவுபட்ட அன்னத்துடன் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளிலும் இலவசமாக செய்யப் பட்டுவருகின்றது. மருத்துவ கல்லூரில் அறுவைசிகிச்சை செய்வது என்பது எல்லோருக்கும் ஓரளவு தெரிந்திருக்கும். அதே நேரத்தில் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்புப் பணி தொடச்சியாக நடைப் பெற்றுவந்துகொண்டு இருகிறது.

வாராந்திர ஆய்வுக் கூடத்தில் அந்த வாரத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை (தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் ஆன மொத்த குழந்தைகள் ) , அதில் பிளவுப்பட்ட உதடு மற்றும் அன்னத்துடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக வாராந்திர அறிக்கையாகப் பெறப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. அந்த ஊருக்கு புதிதாக வெளியூரிலிருந்து வந்த குழந்தைகளும் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது. அனைத்து சிக்கலான குழந்தைகளும் மருத்துவகல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப் படுகிறது.

தற்போது 15வயதுக்குட்ட குழந்தைகளில் பிளவுபட்ட உதடு மற்றும் அன்னத்துடன் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் பிளஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம். (அப்படி ஏதாவது குழந்தை அறுவை சிகிச்சை செய்யப்படாமல் இருந்தால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகினால் அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்வார்கள்).


சில தனியார் மருத்துவ மனைகளும் இந்த சேவையினை இலவசமாக தமிழகத்தில் செய்து வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்க செய்தியே ஆகும்.

Friday, February 20, 2009

அரசு மருத்துவமனையில் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

அரசு மருத்துவமனையில் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.
முதலில் மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளிடம் கேட்க விரும்பும் ஐந்து கேள்விகளும், அதற்கு பின்னர் நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்க விரும்பும் ஐந்து கேள்விகளும்

நிர்வாகம் நோயாளிகளிடம் கேட்க விரும்பும் ஐந்து கேள்விகள்
  1. தனியார் மருத்துவமனைகளில் டோக்கன் வாங்கி பல மணி நேரம் காத்திருந்து மருத்துவரை பார்க்கிறீர்க்ளே. அரசு மருத்துவமனையில் மட்டும் ஏன் மருத்துவரின் நாற்காலியை சுற்றி 10 பேர் நின்று அனைவரும் ஒரே நேரத்தில் மருத்துவரின் முகத்திற்கு எதிராக உங்கள் சீட்டை நீட்டுகிறீர்கள்.

  2. உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துள்ளீர்கள். மருத்துவமனை என்றால் மட்டும் ஏன் கண்ட இடங்களில் எச்சில் துப்ப வேண்டும். படியில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு மீதி உணவை அங்கேயே போட வேண்டும்.

  3. பலமாத கால்புண்ணிற்கு இரவு 11 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து உள்நோயாளியாக சேர்ந்து விட்டு அந்த சமயம் இருக்கும் ஒரே பணி மருத்துவர் ஹார்ட் அட்டாக் நோயாளிகளையும், விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களையும் பார்க்கும் நேரம் கால் புண்ணிற்கு மருந்து போடவில்லை என்று கூப்பாடு போடுவது நியாயமா.

  4. உடல் நிலை தேறிய பின்னர்தான் அறுவை சிகிச்சை என்று தனியார் மருத்துவமனை கூறினால் ஒழுங்காக பழங்களை / சத்து மாத்திரைகளை சாப்பிட்டு ஒரு மாதம் கழித்து வருகிறீர்கள். அதே போல் அரசு மருத்துவமனையில் கூறினால் மட்டும் ஏன் எம்.எல்.ஏவிடம் சிபாரிசு வாங்குகிறீர்கள்.

  5. மருத்துவர் சோதித்து பார்த்து ஒன்றும் இல்லை என்று கூறியபின்னர் இலவசம் என்ற ஒரே காரணத்திற்காக ஸ்கேன் / எக்ஸ்ரே இலவசமாக எடுக்க வேண்டும் என்று அடம் பிடிப்பது நியாயமா. அப்படி உங்களுக்கு தேவையில்லாமல் எடுக்கப்படுவதால் தேவைப்படும் மற்றொருவருக்கு எடுக்க முடியாமல ஆகிறது என்று உணர மாட்டீர்களா

நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்க விரும்பும் ஐந்து கேள்விகள்
  1. புற நோயாளி பிரிவின் வேலை நேரம் காலை 7:30 முதல் 9:30 என்றால் 7:15க்கு வந்து அனைத்து முன்னேற்பாடுகளை கவனித்து விட்டு 7:30க்கு முதல் நோயாளியை பரிசோதித்தால் என்ன

  2. மருந்து பொருட்கள் தீரும் முன்னரே அதை வாங்கி வைக்கலாமே. ஏன் தீரும் வரை காத்திருக்க வேண்டும்

  3. படுக்கை விரிப்புகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்றுகிறார்கள்.

  4. சீட்டு எழுதுபவர் ஏன் ரசீது அளிக்காமல் 1 ரூபாய் அல்லது 2 ரூபாய் வாங்குகிறார். அதை தடுக்க முடியாதா.

  5. ஆம்புலன்ஸ் கட்டணம் கிலோமீட்டருக்கு இத்தனை ரூபாய் என்று பெரிதாக போர்டு மாட்டியிருந்தும் டிரைவர் 2000, 3000 என்று ஏன் பேரம் பேசுகிறார்

Saturday, February 14, 2009

கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சத்தான உணவு சமைத்து பரிமாற படுகிறது

முப்பது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வசதிகளைப் பெருக்குவதற்காக பணவசதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்தவைகள்.

குழந்தை மற்றும் தாய் சேய் நல ஆணையர் கூறியதாவது, கர்ப்பிணி பெண்கள் மருத்துவ உதவிக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதால் நவீன மருத்துவக் கருவிகள், மேம்படுத்தப்பட்ட மருத்துவக்கூடம் அத்துடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்குவது மற்றும் தொலைக்காட்சி தொடர்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் 35 லிருந்து இவ்வருடம் 65 ஆக உயர்நதுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புதூர் கிராம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏறத்தாழ தினமும் ஒரு குழந்தை பிறக்கின்றது.

பண்டிகாவனூர் கிராமத்தில் உள்ள ஒரு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில், அக்கிராம மக்கள் தொகை 2000 பேரில் சுமார் 110 பேர் வாராந்திர விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குத் வருகைத் தருகின்றனர். எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் குறித்த விளக்கம் மற்றும் பரிசோதனை செய்யப்படுகிறது.

தகவல் - ஹிந்து செய்தித்தாள், டிச 5, 2007.