Wednesday, August 11, 2010

இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..?

அவர் அந்த ஊரின் பெரிய பணக்காரர். அவரின் மனைவிக்கு கடுமையான நெஞ்சுவழி. ஏறக்குறைய நேரம் இரவு 11ஐ தாண்டி விட்டது. நகரத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து கிலோமீட்டர் தாண்டியிருக்கும் கிராமம் அது. சற்று பெரிய கிராமம். (வாசு, ரவிக்குமார் படங்களில் காட்டப் படுவது போன்றது).

வழக்கமாக அந்த ஊரில் அந்த அம்மாவிற்கு ஊசி போடுபவர் எங்கோ வெளியூர் போய்விட்டார். இப்போது என்ன செய்வது என பண்ணையாரும் அவரது கைத்தடிகளும் மண்டையை பயங்கரமாக கசக்கிப் பிளிந்து கொண்டிருந்தனர். அப்போது கணக்குப் பிள்ளை ஒரு வழியைக் கூறினார். அந்த ஊரின் அருகிலுள்ள ஊரில் ஒரு ஆரம்ப சுகாரார நிலையம். அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிதாக ஒரு மருத்துவர் வந்திருந்தார். அவரின் தந்தைதார் இதே ஊரில் ஏற்க்குறைய பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன் ஆசிரியாராய் பணியாற்றியிருந்தார். அதனால் இந்த ஊரில் இருந்த சில பெருந்தலைகள் அவருக்கு ஓரளவுக்குப் பழக்கம். அதனால் இதே ஊரில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து அங்கேயே தங்க ஏற்பாடு செய்திருந்தார்.

கணக்குப் பிள்ளை சொன்னவுடன் பணக்காரருக்கும் அதுவே சரியான யோசனையாகப் பட்டது. மருத்துவரை அழைக்க பணக்காரரின் கார் புறப்பட்டது. அங்கே மருத்துவரின் வீட்டுக் கதவு தட்டப் பட்டது. மருத்துவர் வந்தார். தான் இன்று மருத்துவ முகாமிற்கு சென்றிருந்ததாகவும் சற்றுமுந்தான் வந்ததாகவும் தெரிவித்தார்.

அவசியமென்றால் நோயாளியை இங்கு அழைத்துவாருங்கள் பார்க்கிறேன்
என்று மருத்துவர் தெரிவித்தார்.

தாய் அவுக இங்கெல்லாம் வரமாட்டாக.. அதுவும் நெஞ்சுவலின்னு சொல்றோம் . வா டாக்டர். இது கைத்தடிகள்.

மருத்துவர் தனக்கு முடியவில்லைஎன்று மறுக்க மருத்துவரின் தந்தைக்கு அலைபேசி பறந்தது. தந்தையார் மகனிடம் அலைபேசியில் பேசினார். சூழ்நிலைக்கு தகுந்தது போல் அனுசரித்துப் போகுமாறும் பெரிய குடும்பத்தினை பகைத்துக் கொள்ளவேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டது.

மருத்துவர் புறப்பட்டுப் போனார். அங்கே போய் பார்த்த போது பண்ணைக் காரின் மனைவி பெரிய சைஸ் கலர் டி.வி.யில் ஏதோ நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஈ. சி. ஜி. பரிசோதனை எடுக்க வேண்டுமே...

அதெல்லாம் எடுத்திருக்கிறோம். பல்வேறு பரிசோதனைகளும் செய்திருக்கிறோம். என்று பெரிய புத்தகத்தை எடுத்து கையில் கொடுத்தனர். மருத்துவர் பார்த்தார். அது நானூறு கி.மீ. தூரத்தில் இருக்கும் பெருநகரத்தில் பார்த்த மருத்துவ குறிப்புகளின் தொகுப்பு.

பயப்பட ஒன்றும் இல்லை. இது சாதாரண வலிதான்
இது மருத்துவர்.

நானும் இதைதான் டாக்டர் சொன்னேன். இதுக்குப் போய் டவுனுக்கு கூப்பிடறாங்க .. நான் தான் இங்கிருக்குறவரையே கூப்பிட்டு ஊசிப் போட்டுக்கலாம்னு சொன்னேன். இது பண்ணைக்காரர் மனைவி.

மருத்துவர் தான் வந்த வேலையை முடித்துவிட்டு கிளம்பும்போது அவருக்கு ஃபீஸ் எவ்வளவு எனக் கேட்கப்பட்டது. மருத்துவரும் பெருந்தன்மையாக
அப்பாவுக்குத் தெரிஞ்சவர்ன்னு சொல்லறீங்க . என்க்கு ஃபீஸ் எதுவும் வேண்டாம். என்றார் மருத்துவர்.

டாக்டர் அப்படியெல்லாம் நீங்கள் மறுக்கக் கூடாது. கண்டிப்பாக நீங்க வாங்கிக் கொண்டே தீர வேண்டும். என்று கையில் பணத்தினை திணித்தனர். அது ஒரு பத்து ரூபாய். ( அப்போது அந்த ஊரில் ஒரு டீயின் விலை 2.50)

மருத்துவர் அதிர்ச்சியில் நின்றிருக்க அவர்களே தொடர்ந்தனர். டாக்டர் நாங்க எப்போதும் 5தான் கொடுப்போம். நீங்க நம்ம வாத்தியாரோட பையன் அப்படிங்கறதால 10 கொடுத்திருக்கிறோம்.

( அந்த ஊரில் அந்த அம்மாவுக்கு எப்போதும் ஊசி போடுபவர் ஒரு அனுபவரீதியில் ஆனவர். அவருக்குத்தெரிந்த நாலைந்து மருந்துகளை வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருப்பவர். மக்கள் அவரையும் இவரையும் ஒரே தட்டில் வைத்து பார்த்திருக்கின்றனர்)

14 comments:

  1. கொடுமைடா கோவிந்தசாமி

    ReplyDelete
  2. உங்கள் வலைப்பதிவுக்கு கவி நயா அவர்களின் அம்மன் பாட்டு வலைப்பதிவு வழியாக
    வந்தேன். கிராமபுறச் சூழ்னிலையில் ஒரு மருத்துவருக்குத் தரப்படும் மரியாதை,
    கட்டணத்தொகை ஆகியவற்றை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.

    நீங்கள் சொல்வது சரிதான். சென்னையிலே மூக்கை ஒரு தரம் பார்த்துவிட்டு, எக்ஸ் ரே எடுங்கள், எனச்சொல்லி, ரூபாய் 250 பிடிங்கி, பிறகு அதுவும் போதாது என்று ஸ்கேன் செய்யுங்கள் என்று சொல்லி அதில் 50 விழுக்காடு பெறும் அனுகூலங்கள் கிராமப்புறத்தில் கிடையாது என்பதும் உண்மை. ( பார்க்க வலைப்பதிவு:
    http://Sury-healthiswealth.blogspot.com

    நிற்க. இச்சமயம், சுமார் 40 ஆண்டுகட்கு முன் நடந்த நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. திருச்சி அருகே மணப்பாறை ஊரில் ஒரு டாக்டரிடம் சென்றிருந்தேன்.டாக்டர் எனக்கு நண்பராகி இருந்தார். அவரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு இளவயது பெண் சுமார் 25 வயதிருக்கலாம். இரண்டு மூன்று பேர் கைத்தாங்கலாக உள்ளே நுழைந்தார். அப்பெண் மூச்சு இரைத்துக்கொண்டிருந்தது. உள்ளே சென்றவர்கள், டாக்டரிடம், அந்த பெண் நேற்று பிரசவித்திருக்கிறாள் எனவும், திடிரென மூச்சு இரைக்கின்றது என்றும் சொன்னார்கள்.
    டாக்டர் அப்பெண்ணை பரிசோதித்து விட்டு, உடனே இப்பெண்ணை திருச்சி பெரிய
    மருத்துவ மனைக்கு கூட்டிச் செல்லுங்கள் என்றார். உடனே ஒரு ஊசியும் போட்டு,
    எவ்வளவு சீக்கிரம் செல்ல முடியுமோ செல்லுங்கள் , என்றார். வந்தவர்களிடம் ஏதும் பணம் இல்லை.

    அவர்கள் சென்றவுடன், டாக்டர் என்னிடம் அந்த ப்பெண்ணுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது, தீவிர சிகிச்சை பெறவேண்டும் என்றார். நான், அவரிடம், நீங்கள் முதலுதவியாக ஏதேனும் செய்தீர்களா என்றேன். அதற்கு அவர், என்னால் ஏதும் செய்ய
    இயலவில்லை. அதற்கு உடனடியாக ஹெபரின் இஞ்செக்ஷன் போடலாம். அது கிட்டத்தட்ட 50 ரூபாய் விலை. என்னிடம் ஒன்று தான் இருக்கிறது. என்ன செய்வது?
    பணம் செலுத்தக்கூடிய வர்களுக்காக வைத்திருக்கிறேன் என்றார். ஒருவேளை அவ‌ள் திருச்சிக்கு சென்றால் பிழைக்க‌லாம் என்றார்.
    அத‌ற்கு மேல் அதுப‌ற்றி ஒன்றும் பேச‌வில்லை.ம‌று நாள் நான் காலை ர‌யில்வ‌ண்டி நிலைய‌த்திற்குச் சென்றேன். ந‌டு வ‌ழியில் ஒரு பிண‌ ஊர்வ‌ல‌ம். ய‌தேச்சையாக‌ அப்ப‌க்க‌ம் பார்த்தேன். அப்பெண் நிம்ம‌தியாக‌ உற‌ங்கிக்கொண்டு ப‌டுத்துக்கொண்டு
    சென்றுகொண்டிரு ந்தாள்.

    இது ந‌ட‌ ந்து ஒரு 40 வ‌ருட‌ங்க‌ளாகியும் என்னால் இந்நிக‌ழ்வினை ம‌ற‌க்க‌ இய‌ல‌வில்லை. டாக்ட‌ர் செய்த‌து ச‌ரியா த‌வ‌றா என‌ இன்ன‌மும் தெரிய‌வில்லை. அக்கால‌த்தில் ரூபாய் 50 என்ப‌து வெகு பெரிய‌ தொகை என்ப‌தை ம‌றுப்ப‌த‌ற்கில்லை.

    இன்றைய‌ தேதியில் இ ந்திய‌ ம‌ருத்துவ‌ க‌ல்வி பெறுவ‌த‌ற்கு 15 முத‌ல் 25 ல‌ட்ச‌ம்
    செல‌வ‌ழிக்க‌ வேண்டிய‌ சூழ்னிலையில் ம‌ருத்துவ‌ர்க்ள‌ ம‌ன‌திலே உள்ள‌ எதிர்பார்ப்புக‌ளிலும்
    நியாய‌ங்க‌ள் இல்லாம‌ல் இல்லை.

    சுப்பு ர‌த்தின‌ம்.

    ReplyDelete
  3. வாங்க ஸ்ரீதர்கண்ணன், முரளிகண்ணன்,
    newspaanai ,sury அவர்களே...

    ReplyDelete
  4. இந்த கதையில் மருத்துவர் அந்த நபருக்கு இலவசமாகவே சேவை அளிக்க தயாராக இருந்தார்.

    பணவசதி இல்லாத ஒரு நபர் தனது சுயமரியாதை காரணமாக தன்னால் முடிந்த சிறுதொகை (தனியார் மருத்துவமனையில், ஆலோசனைக் கூடத்தில்)யைக் கொடுக்கும்போது அந்த சிறுதொகையை ஏற்றுக் கொள்ளத்தயாராகத்தான் இருந்திருக்கிறார்.

    ஆனால் வசதி படைத்த ஒரு நபர் தனக்கு இலவச சிகிச்சை தெவையில்லை என்று கூறி மிகக் குறைவான ஊதியம் கொடுப்பது ஊதியம் பெருபவரின் சுயமரியாதையைப் பாதிக்காதா?

    ReplyDelete
  5. அது மட்டுமல்லாமல் உள்ளூரில் இருக்கும் போலி நபருடன் ஒப்பீடு செய்வது என்பது மிக மோசமாக காயப் படுத்தும் அல்லவா...?

    இந்த சூழல் கிராமங்களில் சென்று க்ளினிக் துவங்கும் அனைத்து இளம்மருத்துவர்களுக்கும் இருக்கிறது என்பதே உண்மை.

    ReplyDelete
  6. //இது ந‌ட‌ ந்து ஒரு 40 வ‌ருட‌ங்க‌ளாகியும் என்னால் இந்நிக‌ழ்வினை ம‌ற‌க்க‌ இய‌ல‌வில்லை. டாக்ட‌ர் செய்த‌து ச‌ரியா த‌வ‌றா என‌ இன்ன‌மும் தெரிய‌வில்லை. அக்கால‌த்தில் ரூபாய் 50 என்ப‌து வெகு பெரிய‌ தொகை என்ப‌தை ம‌றுப்ப‌த‌ற்கில்லை.//


    கண்டிப்பாகத் தவறுதான். அதுபோன்ற மருந்தினைக் கையில் வைத்திருந்து மருத்துவம் செய்யும் அளவு வளர்ந்திருக்கும் மருத்துவருக்கு அந்தத் தொகை திரும்ப வராமல் இருந்திருந்தால் அது ஒரு மிகச் சிறிய இளப்பாகவே இருக்கும்.

    ReplyDelete
  7. //. இரண்டு மூன்று பேர் கைத்தாங்கலாக உள்ளே நுழைந்தார். அப்பெண் மூச்சு இரைத்துக்கொண்டிருந்தது//


    இதே போன்ற சூழலை கிராமங்களில் தங்கும் பெரும்பாலான மருத்துவர்கள் சந்தித்துத்தான் வருகிறார்கள். மிக மோசமான சூழ்நிலையில் உள்ள நோயாளியை கொண்டுவந்து (நோயாளீயை நகரத்திற்கு அழைத்துச் செல்லச் சொன்னாலும் கேட்காமல்) அவர் வீட்டிலேயே இருத்திவிட்டு பார்க்கச் சொல்லிக் கட்டாயப் படுத்துவது மிகச் சாதாரணமாக நடக்கும்.

    அதுவும் ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும் ஊரிலேயே தங்கியிருக்கும் மருத்துவர் என்றால் அவர் அந்த ஊரை விட்டு வெளியேறி அருகிலுள்ள நகரத்திற்குச் செல்லும் வரை அவரை விட மாட்டார்கள்.


    உடல் நிலை மிக மோசமான சூழ்நிலையில் உள்ள நோயாளிகளை வசதியற்ற சூழலில்( வீட்டில் )
    பார்க்கச் சொல்லிக் கட்டாயப் படுத்துவதுகூட அறியாமை மற்றும் அதிகப் படியான எதிர்பார்ப்பு என ஜீரணீத்துக் கொள்ளமுடியும். ஆனால் மிக அதிக அளவில் குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பவரைக் கொண்டுவந்து அவரது குடிகாரத் தோழர்கள் செய்யும் கூத்து சொல்லி ஓயாது.

    ReplyDelete
  8. கடந்த சில வருடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தப் பட்ட பல நூறுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கிராமங்களில்தான் தங்கியிருந்தனர்.

    திருமணமாதவர்கள் என்பதால் மின்சாரம், தண்ணீர், மற்றும் கேபிள் டி.வி. மட்டும் இருந்தால் போதும் என்ற சூழ்நிலையில் பணியிருக்கும் இடத்திலேயே தங்கி பணியாற்றி வருகின்றனர்.

    ReplyDelete
  9. ஹ்ம்ம்ம்ம்.. என் தங்கைகளின் மூலம் அவர்களின் இத்தகைய அனுபவங்களை கேட்டுருக்கிறேன் ...

    ReplyDelete
  10. வேதனையான விஷயம் தான். கிராம மக்கள் மருத்துவரின் சேவையை மதிப்பளித்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.மருத்துவர்,கால்நடை மருத்துவர்,ஆசிரியர்,ஆகியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை அக்கிராமத்து, ரேஷன் கடைக்காரருக்கு கொடுப்பதை விட குறைவுதான்.படிப்பில் முதலிடம் பெறும் மாணவர்களே மருத்துவர்களாக வருகிறார்கள்( மருத்துவம் கிடைக்காததால் அதன் பிறகு பட்டம் படித்து ஐஏஸ் ஆனவர்கள் நிறைய)அவர்களுக்கு உரிய சன்மானம் என்பது மத்திய அரசை ஒப்பு நோக்கும் போது மாநில அரசு தருவது மிகக்குறைவு.அரசே இப்படி இருந்தால் மக்களை என்ன சொல்ல?

    ReplyDelete
  11. //அந்த ஊரின் அருகிலுள்ள ஊரில் ஒரு ஆரம்ப சுகாரார நிலையம். அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிதாக ஒரு மருத்துவர் வந்திருந்தார்.//

    ம்ம்ம்.... புரியுது!

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  12. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    www.ChiCha.in

    www.ChiCha.in

    ReplyDelete