கிராமங்களுக்கு மருத்துவர்கள் செல்ல மறுக்கிறார்கள் என்ற வாதம் தற்போது குறைந்து கொண்டு இருந்தாலும் இன்னும் சிலர் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அரசுப் பணியில் செல்ல எந்த ஒரு மருத்துவரும் கடந்த சில ஆண்டுகளில் மறுக்கவில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் கிராமங்களில் எத்தனை என்பதில்தான் தற்போது இதுபோன்ற கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன.
குக்கிராமங்களுக்கு மருத்துவர்கள் ஏன் சென்று சொந்தமாக கிளினிக் நடத்துவதில்லை என்ற கேள்விக்கு பதில் எல்லோருக்கும் தெரியும் என்பதால் அதை தனியாக பின்னர் பார்ப்போம்.
ஓரளவு ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறையாவது பேருந்து வரும் கிராமங்களுக்கு தனியாக கிளினிக் துவங்க நினைக்கும் மருத்துவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி நாம் பார்க்கலாம்.
( ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் இதே போன்ற ஒரு கிராமத்தில் எனது கிளினிக் இருப்பதால் எனக்கு இதில் நல்ல அனுபவம் உண்டு. )
இந்த பிரச்சனை பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்து வரக்கூடிய கிராமங்களிலும் உண்டு. நகரத்தை மிக ஒட்டி இருக்கும் கிராமங்களை நகரத்தோடே சேர்த்துக் கொள்ளலாம்.
தற்போதைய சூழலில் கடந்த சில ஆண்டுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கிராமங்களில் பணியாற்ற தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதால் பல இளம் மருத்துவர்களும் இந்தப் பிரச்சனைகளை சந்தித்து பின்னர் அரசுப் பணி மட்டும் போதும் என்ற சூழலில் இருக்கிறார்கள்.
கட்டாயமாக கிராமங்களில் பணியாற்ற அரசு உத்தரவிட்டு இருப்பதால் அவருக்கு பணி மாறுதல் பொதுவாக கிடையாது. நகரத்தில் ஏற்கனவே வளர்ந்த நிலையில் இருக்கும் மருத்துவமனைகளுடன் போட்டி போட முடியாது என்ற சூழலில்
இந்த இளம் மருத்துவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஓரளவு பெரிய கிராமத்தில் கிளினிக் ஆரம்பித்து பின்னர் பல பிரச்ச்னைகளை சந்தித்து கிளினிக்கை மூடிவிட்டு அரசுப் பணியை மட்டும் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் பிரச்சனைகளை சரி செய்தாலே மாலைவேளைகளில் அவர்களை அந்த கிராமங்களில் அமர வைக்க முடியும்.
அந்தப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசவே இந்த இடுகை
================================================================
முதல் பிரச்சனை
அந்த ஊரில் ஏற்கனவே இருக்கும் போலி மருத்துவர். பொதுவான வியாதிகளுக்கு பொதுவான சில வைத்திய முறைகளைப் பின்பற்றி குணப் படுத்தி வாழ்வை ஓட்டி வருபவர்கள் இவர்கள். ஆனால் மிக நுணுக்கமான சில அறிகுறிகள் மருத்துவர்களால் பார்க்கப் பட்டிருந்தால் உயிர் பிழைத்திருக்கக் கூடிய பல நோயாளிகளை பரலோகம் அனுப்பிய பெருமை இவர்களுக்கு உண்டு.
எங்கள் பாடப் புத்தகத்தில் ஒரு பொன்மொழி போட்டிருப்பார்கள்.
உன் அறிவுக்குத் தெரிந்தவைதான் உன் கண்களுக்குப் புலப் படும்.
போலிக்கு அதெல்லாம் தேவையில்லையே...
ஆனால் அந்த ஊரில் வீட்டிற்கே வந்து அவர் வைத்தியம் பார்ப்பதால் அவர் அந்த ஊரில் ஒரு ஹீரோ போல இருப்பார்.
அந்த ஊரில் உள்ள பெரும் புள்ளிகளுக்கு வீட்டிற்கே சென்று காத்திருந்து சத்து ஊசி போட்டு விடுவதால் அந்த ஊர் பெரும் புள்ளிகளின் அன்புக்கு பாத்திரமாக இருப்பார்.
நமது எம்.பி.பி.எஸ் மருத்துவர் அந்த ஊருக்குப் போனால் ஓரளவு படித்தவர்கள், ஓரளவு நல்ல வேலையில் இருப்பவர்களின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் புதிதாக கிராமத்திற்கு வந்த எம்.பி.பி.எஸ் மருத்துவரிடம் வரத்தொடங்குவார்கள். ( ஆனால் அவர்களும், அவர்கள் குழந்தைகளும் வழக்கப் போல நகரத்திற்குத்தான் செல்வார்கள், அவர்கள் இந்தப் பக்கம் திரும்ப சில ஆண்டுகள் பிடிக்கும் ).
இது போன்ற வருவாய்தரத்தக்க முக்கிய வாடிக்கையாளர்கள் இடம் மாறுவதால் நமது போலி ( அரைகுறை என்று சொல்லலாமா? என்று தெரியவில்லை) அவருக்கு செல்வாக்கு உள்ள பெருந்தலைகள் உதவியுடன் மறைமுகமாக தொல்லைகள் கொடுக்க ஆரம்பிப்பார்.
கருக்கலைப்பு
இன்றைய சூழலில் கருக்கலைப்பு என்பது கொஞ்சம் செலவு பிடிக்கும் விஷயம்தான். நகருக்குச் சென்று கருக்கலைப்பு செய்தல என்பது பிறருக்குத் தெரிந்து விடும் என்பதால் உள்ளூரிலேயே கருக்கலைப்பு செய்யும் ஆட்கள் சிலர் இருப்பார்கள். இவர்களுக்கு இருக்கும் சில வாடிக்கையாளர்கள் நட்பிற்காக எதையும் செய்வார்கள். ( போலிகளின் கருக்கலைப்பு எவ்வாறு மிகக்குறைந்த செலவில் நடக்கிறது என்பதை
இந்த சுட்டி மூலம் தெரிந்து கொள்ளலாம்).
நமது எம்.பி.பி.எஸ் மருத்துவரை மட்டம் தட்டுவதில் முதல் கவனம் செலுத்துவார். நமது மருத்துவர் டிஸ்போசபிள் சிரிஞ்ச் உபயோகப் படுத்துவதில் ஆரம்பிப்பார். தேவையில்லாமல் மக்களுக்கு செலவு வைப்பதாகச் சொல்லுவார். தான் எப்போதும் சொந்த ஊசி மற்றும் குழல் கொண்டுவருவதாக பெருமை அடித்துக் கொள்வார். எனக்குத்தெரிந்த ஒரு போலி திருமலை படம் வெளிவந்த நேரத்தில் விஜய் சட்டைக் காலரிலிருந்து வாயால் கவ்வி சிகரெட் எடுப்பது போல ஊசியை எடுப்பார்.
அடுத்ததாக ஊசியை வெந்நீரில் கழுவாமல் உபயோகப் படுத்துவதாக சொல்லிக் கொண்டு சுற்றுவார்.( சுத்திகரிக்கப் பட்ட ஊசி மற்றும் குழாயை கவர் உடைத்ததும் அப்படியே உபயோகப் படுத்த வேண்டும் என்பது கிராம மக்களுக்கு தெரியாதல்லவா)
அடுத்ததாக அதிக டோஸ் மருந்துகள் உபயோகப் படுத்துவதாகவும் அதனால்தான் ஊரில் உள்ள அவருக்கு அந்த தொந்தரவு வந்தது இவரூக்கு இந்த தொந்தரவு வந்தது என்று சொல்லுவார்.
அடுத்ததாக் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது நண்பர்களை அனுப்பி சண்டை செய்யச் சொல்லுவார். பின்னர் அவரே வந்து சமாதானப் படுத்துவார். பின்னர் இந்த ஊர் பசங்க ரொம்ப கெட்டவங்க சார். உங்க அறுமை இவனுகளுக்குத் தெரியல இவனுகளோடு உங்களுக்கு என்னப் பேச்சு என்று அழகாகப் பேசி மருத்துவரை மூட்டைக்கட்ட வைத்து விடுவார்.
இந்த அரைகுறைகளை பற்றி அரசுக்குத் தெரியப் படுத்தி கலைய வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. அப்படியே இவர்களை கைது செய்ய வந்தாலும் இவர்கள் தனியாக போர்டு எதுவும் வைக்காத காரணத்தாலும், அந்த ஊருக்கு ஒரே ஒரு வழி மட்டும் இருக்கும் காரணத்தாலும் கிராமத்தில் உள்ளவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இருப்பதாலும் போலியை கைது செய்ய முடியாது. அப்படியே உள்ளே போனாலும் அவரது வாடிக்கையாளர்கள் அவரது மகனை அடுத்த வாரிசாக உருவாக்கி விடுவார்கள்.
தொடரும்.
தமிழீஷில் ஓட்டுக் குத்த இங்கு அழுத்தவும்
Read more...