டிஸ்கி:- இது முழுக்க முழுக்க ஒரு பின்னூட்டமே,இதனை எதிர்விளைவு என்பதைவிட விளைவு என்றே கொள்ளலாம். இதில் சண்டை போட நினைப்பவர்கள் ஆக்க பூர்வமான விஷய்ஙகளை மட்டுமே விவாதத்திற்கு கொண்டுவரவும். (சில நபர்களை என்றும் திருத்தவே முடியாது. அவர்களை திருத்துவதைவிட பெறும்பான்மையானவர்களுக்கு சரியான கோணத்தைக் காட்டிவிட்டால் போதும் என்று எனது ஆசிரியர் கூறுவதுண்டு. எனவே பிரச்சனை சரிசெய்வதைப் பற்றி மட்டுமே பேசவும்.)
என்ற நண்பர் முகிலனின் தமிழ்நட்சத்திர பதிவுக்கு பதிலாக என்பதைவிட பின்னூட்டமாகவே இந்த இடுகைத் தருகிறேன்.
எனக்கு வெளிநாடுகளில் எப்படி என்றெல்லாம் தெரியவில்லை. நமது பகுதியில் நடைபெறும் சில விஷயங்களில் நிகழும் சில தவறான புரிதல்களுக்காக இதை எழுதுகிறேன்.
அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முதல் அடிப்படைக்காரணம் மருத்துவருக்கும் அவருக்கும் நடுவில் உள்ள ஒரு திரை.
//“you should trust us"// இந்த வாக்கியம் அவரைக் கோபப் படுத்தி இருக்கும். ஆனால் முதலில் அதுதான் உண்மையும் கூட.
குடும்ப மருத்துவர் என்ற ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போனதுதான். இதற்கான அடிப்படைக் காரணம். ஒரு பொது மருத்துவரை மட்டுமே நாம் எப்போதும் அணுக வேண்டும். அவரது வழிகாட்டுதலின் பேரிலேயே சிறப்பு மருத்துவர்களை அணுக வேண்டும். பெ
ரும்பாலான நோய்களுக்கு M.B.B.S மட்டுமே படித்த மருத்துவரே போதும். அவரை எந்த சூழலிலும் அணுகும் நிலை இருக்கவேண்டும். சிறப்பு மருத்துவர்கள் தேவையான சூழலில் அவரது ஆலோசனைக்குப் பின்னர் சென்று ஆரம்ப கட்ட தொடர்சிகிச்சைக்குப் பின்னர் தொடர்சிகிச்சைக்கு நமது குடும்ப மருத்துவரை அணுக வேண்டும். சில பல ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பதில் உள்ள ஒவ்வொருவரின் உடல் நிலை அவர்களின் எதிர்பார்ப்பு போன்ற விஷயங்கள் அவரது மனதில் நன்கு பதிந்து இருக்கும். உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவான பதிலை அவர் தருவார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சிகிச்சைக்கும் ஒரு மருத்துவரை அணுகும்போது அவருக்கு உங்கள் கேள்விக்கான பொருளை அவர் உங்களுக்கு சொல்வதிலும் நீங்கள் புரிந்து கொள்வதிலும் இடைவெளி ஏற்பட்டு தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்திவிடும்.
குறிப்பிட்ட சிறப்பு மருத்துவர் தேவையில்லாத அறுவை சிகிச்சைகளை ஏற்படுத்திவந்தால் உங்கள் குடும்ப மருத்துவர் அந்த குறிப்பிட்ட மருத்துவருக்கு எந்த நோயாளியையும் பரிந்துரைக்க மாட்டார்.
சில பல ஆண்டுகள் நீங்களும் அவரோடு பழகிவிட்டால் அவரது நம்பகத்தன்மையும் உங்களுக்கு புரிந்து விடும். எனவே தைரியமாக அவர் சொல்வதைக் கேட்கலாம். நம்பலாம்.
சில நோயாளிகள் காய்ச்சல் என்று வருவார்கள். கூட தலைவலி, சளி, இருமல் போன்ற தொந்தரவுகளை சொல்லிவிட்டு மருத்துவரிடம்
எனக்கு என்ன வியாதி டாக்டர் என்று கேட்பார்கள். இந்தக் கேள்விக்கு நேரடியாக பொருள் எடுத்துக்கொண்டு நீங்கதான சொன்னீங்க சளி, காய்ச்சல் என்று அவரிடம் கோபப்படுவதில் அர்த்தம் இல்லை. நோயாளி எதிர்பார்ப்பது தனக்கு வந்திருக்கும் சளிக்காய்ச்சல் என்பது சாதாரண வகையா? அல்லது ஃப்ளூ, காச நோய் வகையா? என்பதான கேள்வி. இது போன்ற புரிதல்களில் ஏற்படும் இடைவெளி குடும்ப மருத்துவரை அணுகும்போது மட்டுமே சரி செய்ய முடியும்.
Infectious diseaseகளில் ஒன்று வயிற்றுப் போக்கு அதற்கு நோயாளியைத் தனிமைப் படுத்துதல் அவசியம் அதனால் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது உண்டு. இப்போதெல்லாம் பிரசவ அறைகளுக்குக் கூட துணைக்கு ஒருவரை அனுமதிக்கிறார்கள். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த நிலை நடைமுறைக்கு வந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. தவிரவும் மருத்துவரின் பரிசோதனை என்பதுதான் இங்கு நோயாளியின் சிகிச்சையை நிர்ணயிக்கும். கண்களைச் சுற்றி உள்ள சுருக்கங்களின் தன்மை, வயிற்றுத் தோல் எடுத்துவிட்டால் பழைய நிலைக்கு போக ஆக் எடுத்துக் கொள்ளும் நேரம். நாக்குவறட்சி, நாடித்துடிப்பு போன்றவையே உடனடி சிகிச்சையை தீர்மானிக்க முடியும்.
இப்`போதெல்லாம் broad spectrum antibiotics பல உபயோகத்திற்கு வந்துவிட்டன. சில மருந்துகளை கொடுத்தாலே அனைத்துவகையான பாக்டீரியா, வைரஸ் ஆகியவை எதிர்க்கும் சக்தி கிடைத்துவிடும்.
மலத்தை எடுத்து staining, culture and sensitivity செய்வதால் ஆகும் கால தாமதம் மற்றும் வீண் செலவுகளை மருத்துவரின் அனுபவம் தவிர்த்து விடும். எனவே மருத்துவரை நம்பித்தான் ஆக வேண்டும். அதற்கு அவரோடு நீண்ட காலப் பழக்கம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
நோயாளிக்கு அளிக்கப் படும் சிகிச்சையை அவருக்கோ அவரது உறவினருக்கோ சொல்லிவிட்டுத்தான் சிகிச்சையை செய்வார்கள். ஆனால் நோயாளியின் ஒவ்வொரு உறவினரும் வந்து கேட்டுக் கொண்டே இருக்க திரும்பவும் முதலில் இருந்து சொல்ல வேண்டிய சூழல் சிகிச்சை அளிப்பதை கால தாமதப் படுத்திவிடும். தவிர நமது ஊரில் ஒவ்வொரு நோயாளிக்கும் பலர் துணைக்கு வருவார்கள். உள்நோயாளி என்றால் பெரிய கூட்டமே வந்து நிற்கும்.
ஒவ்வொரு நோயாளியும் வீட்டிற்குத் திரும்பும்போது தனக்கு அளிக்கப் பட்ட சிகிச்சைக்கான சுருக்கத்தையும், கட்டிய பணத்திற்கான ரசீதினையும் கேட்டுப் பெற வேண்டும். இது அவர்களது அடிப்படை உரிமை. மற்றும் சமூகத்திற்கு ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமை அப்போது மட்டுமே தரத்தினை நன்கு உயர்த்த முடியும்.
//அமெரிக்காவில் வசிக்கும் இந்தியக் குழந்தைகள் பலர் மருத்துவம் படிப்பது என்பதை ஆசையாக, குறிக்கோளாகக் கொண்டிருப்பர். நான் பல குழந்தைகளிடம் ஏன் என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்களின் பதில் - “அப்போது தான் நிறைய சம்பாதிக்க முடியும்” என்பதாகவே இருக்கும்//
இந்த வரியைத் தொடர்ந்து எழுதப்பட்ட வரிகள் மிகவும் உண்மை.
அப்படியே இந்த இடுகை நண்பரால் எழுதப் பட்ட ஒன்று அதையும் படித்துவிட்டு மீண்டும் மேலே உள்ள வரிகளை கவனியுங்கள்.
உண்மையில் மருத்துவம் படித்த பலரும் பலவகைப் பொறியியில் துறைகளில் பணிபுரியும் பலரையும் விட குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்.
//பின்னோக்கி said... அப்புறம் இந்த ஸ்பெஷலிஸ்ட்கள் தொல்லை தாங்கலை.
அவர்கள் நம்மை மனிதனாக பார்ப்பதில்லை. கண் டாக்டர், கண்னை மட்டுமே கவனிக்கிறார்.///
குடும்ப மருத்துவர் உங்களைத் தெளிவாக அறிவார். அவர் சொல்லும் கண்மருத்துவரிடம் சென்றுவிட்டு பின்னர் முடிவு செய்யும் உரிமையை அவருக்கு தரும்போது பிரச்சனை வராது.
//அமுதா கிருஷ்ணா said... ( யார் சார் 5 முதல் 8 வருடம் கஷ்டப் பட்டு படித்து விட்டு கிராமத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய ஒத்துக் கொள்வர்)//
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பணிநியமணம் செய்யப் பாட்ட 3000க்கும் மேற்பட்ட மருத்துவர்களில் கிராமங்களுக்கு செல்ல மறுத்தவர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம். இன்னும் பணிநியமணத்திற்காக காத்துக் கொண்டு இருப்பர்கள் எண்ணிக்கை 2000க்கும் மேல்.
//கண்ணா.. said... நமக்கான விளக்கங்கள் தர பொறுமை இல்லாத டாக்டர்கள்தான் நானும் அதிகம் சந்தித்தது. அவர்கள் விளக்கங்கள்தான் தரவில்லையே தவிர சிகிச்சை நல்ல முறையில் அளித்தனர்.//
குடும்ப மருத்துவர் என்று வந்து விட்டால் உங்கள் எதிர்பார்ப்புக்கேற்ப பதில் தந்து இருப்பார்.
======================================================
எனது நோயாளி ஒருவர். அவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி வருவதுண்டு. அவருக்கு பல விதமான பரிசோதனைகள் செய்து பார்த்து விட்டோம். இருதய மருத்துவர்கள் சிலரிடமும் காட்டிவிட்டோம். நெஞ்சக நோய் மருத்துவரிடமும் காட்டிவிட்டோம். சில காலங்களுக்குப் பின் அவருக்கு சில மாதங்களுக்கு ஒருமுறை நெஞ்சுவலி வரும். வலிநிவாரணி ஊசி ஒன்று பத்துரூபாய்க்குள் வரும். அதைப் போட்டால் சரியாகிவிடும். அவ்வப்போது போட்டுவிடுவேன். (இந்த முடிவு பல சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி எடுக்கப் பட்டது).அந்த ஊசி மருந்தால் பொதுவான நெஞ்சுவலிகள் கேட்காது. வயிற்றுப் புண் இருப்பவர்களுக்கு அதிகமாக போடக்கூடாது. இருதய நோய் காரர்களுக்கும் அதிகமாக போடக்கூடாது.
ஒருமுறை நான் எனது கிளினிக்கில் பிறிதொரு நபருக்கு தையல் போட்டுக் கொண்டு இருந்தபோது அவரை நெஞ்சுவலியோடு அழைத்துவந்தனர். உடனடியாக நான் கையுறைகளை களைந்துவிட்டு அவருக்கு போட வேண்டிய மருந்தினைப் போட்டுவிட்டு அவரைப் படுக்க சொல்லிவிட்டு நான் தையல் போட கையுறைகளை அணிந்து கொண்டிருந்தபோது அவரது சம்மந்தி வந்து அவருக்கு என்ன வியாதி என்று கேட்டார். சாதாரண நெஞ்சு வலிதான். சிறிது நேரத்திற்குப் பின் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு தையல்போடும் இடத்திற்கு சென்றேன். மீண்டும் மீண்டும் கேள்விகள் வந்து கொண்டிருந்தன.
அங்கு பாதித் தையல். ரத்தக் கசிவு இல்லாமல் இருக்க தற்காலிகமாக பஞ்சுமுதலியவை வைத்து இருந்தேன். அவசரம் காரணமாக அவரது மகனிடம் கேளுங்கள் அல்லது சில நிமிடங்களில் இவரே சரியாகிவிடுவார். அவரே சொல்லுவார் என்று சொல்லிவிட்டு தையல் போட ஆரம்பித்துவிட்டேன். போகும்போது சொல்லிக்கொண்டுதான் போனார்கள்.
சில மாதங்கள் களித்து அவருக்கு நெஞ்சு வலி வந்தபோது
நான் சொன்ன பதிலால் கொதிப்படைந்த சம்பந்தி புதிய ஒருவரிடம் அழைத்துச் சென்று பின்னர் முதலில் இருந்து எல்லாம் தொடங்கி சில மாதங்கள் வரை தொடர்ச்சியாக அவ்வப்போது வலியுடனே இருந்தார். பின்னர் என்னிடமே திரும்பிவந்தனர்.
அதில் ஏற்கனவே உள்ள பரிசோதனைகளை மீண்டும் செய்து கொண்டே இருந்திருக்கின்றனர். சிறப்பு மருத்துவராக இருக்கும்போது அவரது துறையில் சிறப்பிடம் பிடித்துவிட்டால் மற்ற துறைகளில் அவர்கவனம் செலுத்த போதிய கால அவகாசம் இல்லை என்ற சூழல் வந்து விடுகிறது. பல துறைகளையும் சந்தித்து நோயாளிக்கு முழுமையான சிகிச்சை கிடைக்க பொது மருத்துவர் குடும்ப மருத்துவரால் மட்டுமே முடியும்.
குடும்ப மருத்துவரான நான் இருதய தொந்தரவோடு, நெஞ்சக நிபுநர், எலும்பு மருத்துவர், மற்றும் மனநல மருத்துவரையும் அணுகி இருந்தேன். நோயாளிக்கும் அவரது மகனும் இது தெரியும்.
இருதய மருத்துவரை அணுகி அவர்கள் இருதய தொந்தரவு ஏதும் இல்லை என்று உறுதி அடையும் வரையிலான அதிகப் படியான பரிசோதனைகளை செய்து கொண்டே இருந்திருக்கிறார்கள். இந்த மருந்துகள் போதும் என்று இருதய நிபுநர் சொல்லியும்கூட வலி குறைய வில்லை என்பதற்காக மேலும் மேலும் பரிசோதனைகள் போய் கொண்டே இருந்திருக்கின்றன. பின்னர் இருதய நிபுநரே அனுப்பிய பின்னர் திரும்பவும் என்னிடம் வந்திருக்கின்றனர். அவர்கள் செய்திருந்த முதலில் செய்த பரிசோதனைக் காகிதங்களில் பாதியை த் தொலைத்து வேறு இருந்தனர்.
தமிழீஷ் ஓட்டுக்கு
Read more...