சாமிக்கு ஆடுவெட்டுவது இப்படித்தான்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அந்த மருத்துவர் மாறுதல் வாங்கிக் கொண்டு வந்து பணியில் சேர்ந்தார். அந்தப் பேருந்து இறக்கிவிட்ட இடத்திலிருந்து பார்த்தார். ஊர் கண்ணில் தட்டுப் பட்டது. எப்படியும் ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும்.
நடந்து சென்று ஊரில் உள்ளவர்களிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தை விசாரித்தார். அது ஊரின் இன்னொரு பகுதியில் இருக்கிறதாம். நடந்து சென்று இடத்தை கண்டுபிடித்தார். எப்படியும் இன்னொரு ஒரு கிலோமீட்டர் நடந்து இருப்பார். பேருந்து வரும் நேரங்களை விசாரித்தார். ஒரேஒரு பேருந்து மட்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் வழியாக பக்கத்துக்கு ஊருக்குச் செல்கிறதாம். அது வரும் நேரம் வேலை நேரத்திற்கு ஒவ்வாததாக அமைந்திருந்தது.
தினமும் மருத்துவர் பேருந்தில் வருவார். இறங்கி ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் நடந்து பணிக்குச் சென்று திரும்பி வந்தார். இந்த சூழலில்தான் டரியல் பொன்னம்பலம் அறிமுகமாகிறார். உள்ளூரில் சற்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் டரியல் பொன்னம்பலம். எப்போதும் புல்லட் வாகனத்தில்தான் இருப்பார். வாரத்தின் சில நாட்கள் அவர் மருத்துவரை அழைத்து வந்தார். சில வாரங்கள் கழித்து அவர் வரமுடியாத சூழலில் வேலை ஆட்கள் யாரையாவது அனுப்பி மருத்துவரை கொண்டுவந்து விடச் செய்வார். எதற்கு உங்களுக்கு வீண்சிரமம் என்று கேட்டபோது எங்கள் ஊருக்கு சேவை செய்ய வந்தவர்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பது தங்களது கடமை என்று கூறிவிட்டார். அதற்கு மேலும் மறுப்பதற்கு மருத்துவருக்கு மனம் இல்லை. இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டுமே.... சில மாதங்கள் இப்படியே சென்றது.
அடுத்த சில நாட்களில் வயதானவர்களுக்கு உதவித்தொகை வாங்க சிலரை அழைத்து வந்தார் டரியல் பொன்னம்பலம். நம்ம ஊர் தாத்தா பாட்டிகள்தான் சார். பாவம் யாரும் இல்லை. கொஞ்சம் போட்டுக் கொடுங்க சிபாரிசு செய்து வயது சான்றிதழ்களைப் பெற்றுக் கொடுத்தார். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு நகல்களில் சான்றொப்பம் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தார். நெருக்கமான நண்பர் அல்லவா.. மருத்துவர் சான்றிதழ்களை கொடுத்துக் கொண்டே வந்தார். சில நாட்கள் மட்டுமே அவர் வந்தார். பின்னர் அவரது வேலை ஆட்கள் யாராவது கூட்டி வருவார்கள். மருத்துவரும் போட்டுக் கொடுத்துக் கொண்டே வந்தார். நிலையத்திலும் தண்ணீர் பிரச்சனை, மின்சார பிரச்சனை ஏதேனும் ஏற்பட்டால் டரியல் பொன்னம்பலத்திடம் சொன்னால் உடனே ஆளனுப்பி செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த ஊரில் மக்கள் ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே.. இதுக்கு முன்னாடி வேலை செஞ்ச இடங்களைவிட நம்ம நண்பர்கள் வேலை செய்யற இடங்களை விட ரொம்ப நல்ல ஊரா இருக்கிறதே.. மருத்துவர் மகிழ்ச்சியுடன் நாட்களை கடத்தி வந்தார்.
உள்ளூரில் ஒரு திருவிழா. டரியல் பொன்னம்பலம் அவர்கள் மருத்துவரை சாப்பாட்டுக்கு கூப்பிட்டு இருந்தார். நெருங்கிய நண்பர் ஆயிற்றே.. மருத்துவரும் சென்றார். சாப்பிட்டுவிட்டு இளைப்பாறிய போது டரியல் ஆரம்பித்தார். சார். உங்களால ஒரு காரியம் ஆகணுமே..
சொல்லுங்க செய்துவிடலாம். ஏதாவது பாட்டிகளுக்கு வயது சான்றிதழ் கேட்பார். அல்லது ஏதாவது மருத்துவ மனைக்கு சிபாரிசு கடிதம் கேட்பார் என்ற எண்ணத்தில் இருந்தார் மருத்துவர்.
நம்ம அண்ணன் ஒருத்தர் இறந்திட்டாரு.. அவருக்கு மரணச்சான்றிதழ் வாங்கணும்
எப்பங்க.. சொல்லவே இல்ல.. கொஞ்சம் அதிர்ந்தார்போல் முகம் தெரிந்தது
அது இரண்டு வருஷத்து முன்னாடி
அப்பவே வாங்கி இருக்கலாமே...
இல்ல சார், அப்ப பதிவு பண்ணல...
ஆமா 21 நாளுக்குள்ள பதிவு பண்ணணும்.
அதுதான் சார் போனவாரத்தில் ஒருநாள் அவர் செத்துப் போனது மாதிரி ஒரு சான்றிதழ் கொடுத்தீங்கண்ணா அதை வச்சு இறப்புச் சான்றிதழ் வாங்கிடுவேன். அதுனால் சொத்துகள் கூட இன்னும் பேர் மாறாம இருக்கு.
அந்த மனிதர் எப்படி இருப்பார்? எப்படி இறந்தார்?. உண்மையிலேயே இறந்துதான் போனாரா என்ற குழப்பத்தில் மருத்துவர் சிலையாக மாறி நின்றார்.
பின் குறிப்பு:-
மருத்துவர் பேசுவது பச்சை நிறத்திலும்
டரியல் பொன்னம்பலம் பேசுவது சிவப்பு நிறத்திலும் இடம்பெற்றுள்ளது
தமிழீஷில் ஓட்டுப்போட இந்தச் சுட்டியைப் பயன்படுத்துங்கள்