Tuesday, December 31, 2013

பிரசவ கால விபத்துக்கள்

பிரசவம்

மனிதனுக்கே உரித்தான சிறப்பான ஒரு செயல். மனிதனுக்கு மட்டுமே பிறரின் உதவி தேவைப் படுகிறது.

இந்த இடுகை யாரையும் பயமுறுத்துவதற்கோ அல்லது குழப்புவதற்கோ அல்ல., எனக்குத் தெரிந்த சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவே..,  விருப்பம் உள்ளவர்கள் தரமான புத்தகங்களின் உதவியோடு மேலும் இது தொடர்பான தங்கள் பார்வையை வளர்த்துக் கொள்ளலாம்.


அம்னியாட்டிக் ஃப்ளூயிட் எம்பாலிஸம்

Amniotic fluid embolism


பனிக்குடத்தில் உள்ள திரவமோ குழந்தையின் உடலில் உள்ள முடி முதலான ஏதாவது ஒரு பொருள் தாயின் ரத்த ஓட்டத்தில் கலந்து  தாயாருக்கு தீவிரமான ஒவ்வாமை விளைவுகளை  உருவாக்கி மிகவும் அவசரம் மற்றும் மோசமான உடல் நிலையை உருவாக்கும் நிலையாகும். இந்த நிலையை முன்கூட்டியே கண்டறிதல் இயலாது. உருவாகிய உடனே கண்டறிந்தால் தாயைக் காப்பாற்ற போர்க்கால அவசர சிகிச்சையைத் தொடங்கி நடத்த வேண்டும்.

இது  லட்சத்தில் 1 முதல் 12 தாய்மார்களுக்கு ஏற்படுகிறது, குழந்தை பிறப்பின்போதோ குழந்தை பிறந்த உடனே ஏற்படலாம்.

அறிகுறிகள்

திடீரென மூச்சிறைத்தல்

நுறையீரலில் நீர்கோர்த்தல்

ரத்தம் உறையாமல் போதல்

திடீரென ரத்த அழுத்தம் குறைதல்

இதயம் செயல் படாமல் போதல்

குமட்டல் , வாந்தி

பதட்டம்

மனநிலை தீடீரென மாறுதல்

நடுக்கம்

வலிப்பு

கோமா நிலை

இவை போன்ற அறிகுறிகள் தீடீரென அதி வேகமாக அதி தீவிரமாக உருவாகக்கூடும்.


காரணங்கள்

இந்த நிலை ஏன் ஏற்படுகிறது என இதுவரை முழுமையாக கண்டறியப் படவில்லை. கர்பப்பையில் இருக்கும் இரத்த நாளங்களில் ஏதேனும் சேதம் அடையும்போது  பனிக்குடத்தின் சவ்வுகள் கிழியும் போது பனிக்குடத்தில் உள்ள திரவமோ வேறு ஏதாவது பொருள்களோ தாயாரின் ரத்த ஓட்டத்தில் கலந்து விடுவதால் இது ஏற்படுகிறது.    பனிக்குடம் உடைவது, குழந்தை தள்ளப் படுவது, நஞ்சுக்கொடி பிரிவது போன்ற நிகழ்வுகள் பிரசவத்தின்போது இயற்கையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா நேரங்களிலும் அதி தீவிர ஒவ்வாமை ஏற்பட்டு விடுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படுகிறது.  அதுவே நிலைமையை மோசமானதாகவும் சிக்கலானதாகவும் மாற்றி விடுகிறது.

இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தாயார்ருக்கு இருக்கக்கூடிய உயர் ரத்த அழுத்தம், அதிக எடை, சர்க்கரை, விபத்து, பரம்பரைத் தன்மை ஆகியவை இந்நிலை உருவாகக் கூடுதல் காரணங்களாக இருக்கக்கூடும்.


விளைவுகள்.

பனிக்குடத்தில் இருக்கும் பொருட்கள் ரத்த ஓட்டத்தில் கலப்பதால் மெக்கானிக்கல் இஞ்சூரி என்று சொல்லப் படக் கூடிய அடைப்புக்கள் ஏற்ப்டலாம். இதனால் முக்கிய உறுப்புகளுக்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டம் நின்று போகலாம். பல நேரங்களில் மூளை, இதயத்திற்கு போகும் ரத்த ஓட்டம் நின்று உயிருக்கு ஆபத்து நேரிடலாம்.

அதி தீவிர ஒவ்வாமை காரணமாக இதய் நுரையீரல் செயலிழப்பு ஏற்படலாம்.


பரிசோதனைகள்:

முழுக்க முழக்க நோய்குறியீடுகளின் அடிப்படையிலேயே நோய் கண்டறியப் படுகிறது.பல நேரங்களில் நோயானது தாயாரின் மரணத்திற்குப் பிறகே உண்ரப் படும் சூழலே நிலவுகிறது.  சில வேளைகளில் போஸ்ட் மார்ட்டம் பரிசோதனையின் போது சிசு தொடர்பான பொருட்கள் நுரையீரலில் காணப் பட்டிருக்கின்றன.

சிகிச்சை

தீவிர மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படும்

உடனடியாக சுவாசம் நன்கு நடைபெற செயற்கை முறையில் உதவிடல் வேண்டும். பல நேரங்களில் செயற்கை சுவாசம், வெண்டிலேட்டர் போன்றவை தேவைப்படலாம்.

இரத்த அழுத்தம், இதயத்துடிப்புகளை கூட்டும் மருந்து தேவைப்படலாம்

உதிரப் போக்கு அதிகமாக இருப்பதால் ரத்தம் நிறையவே ஏற்றவேண்டி வரும்.

ஒருவேளை குழந்தை பிறப்பதற்கு முன் இந்த நிலை ஏற்பட்டால் அவசர அறுவை சிகிச்சை தேவைப் படலாம்.  இது வெகு அபூர்வமே..,


Read more...

Sunday, December 29, 2013

மருத்துவ அறிவும் திரைப்படத் துறையும்

மருத்துவத் துறையைப் பற்றி திரைப் படம் எடுத்தாலே அந்தக் காட்சிகள் மக்களிடம் சிறப்பான வரவேற்பு பெற்று விடும் என்ற நிலையில் இருக்கீறது.

1980களில் வந்த திரைப்படங்களில் ஒரு பெரிய போலிஸ்காரர் , ஒரு வக்கீல்/நீதிபதி, ஒரு டாக்டர் கூட்டணி முக்கிய வில்லன் கூட்டமாகவோ, முக்கிய வில்லனின் நண்பர்களாகவோ இருப்பார்கள். அது சிட்டிசன், சாமுராயில் கூட வந்ததாக நினைவு . அதை நான் தொட போவதில்லை, அவைப் பாத்திரப் படைப்பாக விட்டுவிடலாம்.  மேலும் சில திரைப்படங்கள் மருத்துவத் துறை எப்படி செயல் படுகிறது என்பதே தெரியாமல் அதைப் பற்றி ஹோம் வொர்க் செய்யாமல் எடுக்கப் பட்ட பட்ங்களாக, படத்தின் வெற்றிக்கு இப்படி ஒரு காட்சி தேவை என்பதால் வைக்கப் பட்ட காட்சிகளாக வந்திருக்கும் அந்தப் படங்களில் சிலவற்றை அதுவும் பெருங்குற்றமாக உள்ள படங்களில் சில மட்டும் எடுத்து தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கிறேன்.


பம்மல் கே. சம்பந்தம்.

இந்தப் படம் மௌலி, கமல்ஹாசன், கிரேஸி மோகன் கூட்டணியில் உருவான படம். இவர்களின் நெருங்கிய நண்பர்கள் , உறவினர்கள் பலரும் பெரிய மருத்துவர்கள். இவர்கள் ஒரு திரைப் படம் எடுக்க விரும்பினால் அதைப் பற்றிய புத்தகங்கள் பல படிப்பதாகவும், அந்த காட்சி நடைபெற்ற இடங்களுக்குச் சென்று சில நாட்கள் தங்குவதாகவும் சொல்லிக் கொள்பவர்கள். ஹேராம் படம் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்தந்த கதாபாத்திரங்கள் அவரவர் மொழியிலேயே பேச வைத்தவர். (ஒரு வேளை அவர் கிளியோபாட்ரா படத்தை எடுத்திருந்தால் கதாபாத்திரங்கள் என்ன மொழி பேசுவார்கள் என்று அப்போது பேச்சு அடிபட்டது).  கதாபாத்திரம் எப்படி சிரிக்கும் அழும் என்றெல்லாம் ஹோம் செய்வார் என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் எடுக்கும்போது மருத்துவத் துறை நண்பர்களுடன் கலந்தாலோசித்திருப்பாரா என்பது மிகப் பெரிய கேள்வி கேட்டே இருக்க மாட்டார் என்றுதான் நினைக்கிறேன். 


அந்தப் படத்தில் சிம்ரன் ஒரு அறுவை சிகிச்சை செய்வார். கையில் கையுறை மாட்டிக் கொண்டு வருவார். மயக்க மருத்துவரிடம் புரப்பஃபால் கொடுத்துவிட்டீர்களா என்று கேட்டுக் கொண்டே தனது முகமூடியைக் கட்டுவார். அறுவை அரங்கில் கையுரை அணிந்த பின் இந்த வேலைகள் செய்வது என்பது முழுக்க முழுக்க தடை செய்யப் பட்ட ஒன்று.  இந்த ஒரே ஒரு காரணத்துக்காகவே அந்த அறுவை மருத்துவரை அறுவை அரங்கைவிட்டே துரத்திவிடலாம்.  பல பல ஹோம்வொர்க் செய்யும் கமல் ஹாசன் படத்தில் இடம் பெற்ற காட்சி. அது.

அதற்கடுத்ததாக புரப்பஃபால் கொடுத்துவிட்டீர்களா என்று எந்த ஒரு பெரிய அறுவை சிகிச்சை மருத்துவருமே மயக்க மருத்துவரை பார்த்து கேட்க மாட்டார்கள். சார் ஆரம்பிக்கலாமா என்பது மட்டுமே அவர்கள் கேள்வியாக இருக்கும். தவிரவும் அவர் செய்யும் சிகிச்சைக்கு அந்த மருந்து தேவையும் இல்லை.
.



https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/q71/s720x720/562320_4861310389951_1957702810_n.jpg

அடுத்ததாக அவர் செய்யும் அறுவை சிகிச்சையின்போது அவர் கையில் இருக்கும் வாட்ச் அல்லது மோதிரத்தை நோயாளியின் வயிற்றில் வைத்து தைத்து விடுகிறார். அறுவை அரங்கிற்குள் செல்லும் ஒருவர் தனது மோதிரம் வாட்ச் போன்ற எல்லாவற்றையும் அது திருமண மோதிரமாக இருந்தாலும் கலட்டி வைத்து விட்டுத்தான் கைகழுவ வேண்டும். கைகழுவது என்பதே ஐந்து நிமிடங்கள் நடக்கும் வேலை. அதற்கு பின் கையுறை அணிதல் வேண்டும்.  இந்தக் கையுறையை  அறுவை சிகிச்சை முடிந்து தையல் வேலைகள் எல்லாம் முடிந்த பின்னரே கழட்ட முடியும். அப்படி இருக்கையில் எப்படி அந்தப் பொருள் தவறி விழ முடியும்.  திரையில் காணப் படும் மருத்துவர் மருத்த்வத்தை தனது வாழ்க்கையாக ஸ்டெத்தை தாலியாக நினைத்து வாழும் மருத்துவர் . அவர் எப்படி இது போன்ற பற்பல தவறுகள் செய்யும் மருத்துவராக இருக்க முடியும்.? இது போன்ற காட்சிகள் மிகவும் முட்டாள் தனமாக எடுக்கப் பட்டவை. 

இது எப்படி என்றால் பஸ் ஓட்டுவதை பார்க்கும் குழந்தைகள் சீட்டில் உட்கார்ந்து கொண்டு ஸ்டரிங்கைப் பிடித்துக் கொண்டிருந்தால் வண்டி ஓடும் என்று நினைப்பது போல .., சில அறிவாளி குழந்தைகள் கியர் போடுவதை கண்டுபிடித்திருக்கும்.  ஆனால் க்ளட்ச், ஆக்ஸிலேட்டர் போன்றவைகள் பார்வைக்கே வராது . அது போல தான் மிக மிக மோசமாக நுணிப் புல் மேயப் பட்ட காட்சிகள் இவை.


ரமணா

ரமணா படத்தில் இறந்து போன ஒருவரின் சடலத்தை வைத்திருந்து ஒரு மருத்துவமனையில் வைத்திருந்து மோசடி செய்வதாக காட்டியிருப்பார்கள். அவ்வளவு நேரம் வைத்திருந்தால் பிணம் விரைத்துப் போய் விடும். அதுவும் பிணத்தை கட்டிலில் படுக்க வைத்திருப்பதாக வேறு காட்டுவார்கள். ஒரு பிணத்தை அவ்வளவு நேரம் அப்படியே வைத்திருந்தால் என்னென்ன நடக்கும் என்பது ந்கரவாசிகளுக்கு தெரியாவிட்டாலும் கிராம வாசிகளுக்கு நன்கு தெரியும்.   சராசரி ஆக்சன் படங்களில் கண்டுகொள்ளப்படாமல் விடப் படும் லாஜிக் காட்சிபோல இது வும் ஆகிவிட்டது.


இன்னொரு விஜயகாந்த் படம்.



இதுவும் விஜய்காந்தின் புத்திசாலித்தனத்தை காட்ட எடுக்கப் பட்ட காட்சிகள். பொதுவாக அறுவை அரங்கிற்கு தடையற்ற மின்சாரம் கிடைக்கும் வகையில்தான் ஏற்பாடு செய்யப் ப்ட்டிருக்கும். வெகு வெகு அபூர்வமாக மின்சாரம் கிடைக்காத வகையில் ஒரு விபத்து ஏற்பட்டதாக ஒரு பேச்சுக்கு (பேச்சுக்காக மட்டுமே) வைத்துக் கொண்டாலும். ஒரு மயக்க மருத்துவர் அதை சமாளிக்கும் திறமையானவராகவே இருப்பார். மின்சாரம் போனாலும் நோயாளியை உயிருடன் வைத்திருக்க வேண்டியது அவர் பொறுப்பு, மயக்கம் தெளியாமலும் பார்த்துக் கொள்வார். .

அவர் கத்தி போடும் இடத்தைப் பார்த்தால் நோயாளியின் முகத்தில் வைத்திருக்கும் முகமூடி சம்மந்தமே இல்லாத ஒன்று.

அரங்கில் இருக்கும் மானிட்டர் மிகவும் பரிதாபமாக காட்சி அளிக்கிறது.

அதைவிட கையுறையுடன் மொபைல் ஃபோன் ,  அறுவை அரங்கில் சுத்தம் என்பது மிகவும் கடுமையாக பின்பற்ற பட வேண்டிய நடைமுறை. அதை அப்படியே காற்றில் பறக்க விட்டு இருக்கிறார்கள்.


பிரியாணி;-

பல நாள் ஃபிரிட்ஜில் இருக்கும் நாசரை இப்போதுதான் இறந்ததாக ராம்கி சொல்ல போலீஸ் ஏற்றுக்கொள்கிறது. அதன் பின் சில நாட்கள் கழித்து காட்சிகள் வருகின்றன. இந்த இடைப்பட்ட நாட்களில் போஸ்ட்மார்ட்டம் நடந்திருக்கும். அதில் கண்டுபிடித்திருப்பார்கள் . போஸ்ட்மார்ட்டம் நடந்ததா? அதில் கண்டுபிடித்தார்களே என்பதே கண்டறியப்படாமல் அப்படியே தொங்கலில் விட்டு இருப்பார்கள்.

Read more...

Thursday, September 30, 2010

நகைச்சுவையே இல்லாமல் ஒரு ரஜினி படம் - சரியான நகைச்சுவை 1.10.10

பொது அறிவுக் கேள்வி:- இதுவரை வெளிவந்துள்ள படங்களில் ரஜினி டாக்டராக நடித்து வெளிவந்த கடைசிப் படம் எது?

ரஜினி கெழவிய வெச்சு காமெடி பண்ணியிருக்காருடா

பாட்ஷா (அதை பாஷா என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்) படம் வெளியானபோது எங்களால் அந்தப் படத்தை உடனடியாக பார்க்கமுடியாத சூழல். பொங்களுக்கு முந்தையநாள் படம் வெளியானது. மார்ச் மாதம் +2 தேர்வு.  இருந்தாலும் நகரத்தில்  இருக்கும் வகுப்புத் தோழர்கள் பார்த்துவிட்டிருந்தனர். அவர்கள் சொன்ன கமெண்ட்த்தான் இது. ரஜினியோட பிளஸ்ஸே காமெடிதான் ஆனால் படத்தில் ஆட்டோவில் துவக்க காட்சியில் நக்மாவை ஏற்றிக் கொண்டு ஜனகராஜ் செய்யும் பா......அய்.  என்பது மட்டுமே நகைச்சுவை என்ற கோணத்தில் நண்பர்கள் அந்தப் படத்தின் கதையை சொன்னார்கள்.

சற்று ஆறுதலாக இருந்தது.  ஆஹா.,   நல்லவேளை தப்பித்துவிட்டோம். தேர்வு முடிந்தபின் பார்த்துக் கொள்வோம். என்று ஒதுங்கி இருந்தோம்.  பின் நடந்தது நாடறியும். அதுவும் அறைத்தோழரும், சீனியருமான மல்டி கோவைச் சுற்று வட்டாரத்தில்  எந்த திரையரங்கில் பாட்ஷா போட்டாலும்  அங்கே சென்று பார்த்ததும், துணைக்கு ஆள்கிடைக்காத நிலையில் நம்மை அழைத்துக் கொண்டு சென்றதும், அது ஏறக்குறைய அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடந்ததும் ஏற்கனவே சரித்திரம் ஆகியிருந்தது.


இந்தக் கதைக்கும் இந்த வலைப்பூவுக்குமான தொடர்ப்பினைச் சொல்ல வருகிறேன். ஏறக்குறைய மருத்துவத் தொழிலும் அந்த விமர்சனம் போலத்தான். வருபவர்களின் எதிர்ப்பார்ப்புக்கேற்பத்தான் விமர்சனம் செய்வார்கள்.

சிலர் உள்நோயாளியாக சேர்ந்து பார்க்கவேண்டும் என்றுதான் வருவார்கள். சிலர் வெகுதொலைவில் இருந்துவருவார்கள். அவர்களை உள்நோயாளியாக சேர்க்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் சேர்த்தான் பார்க்க வேண்டும். வெகுதொலைவில் இருந்து வருபவர். போய் திரும்புவதைவிட இங்கேயே தங்குவது  பெருமளவு உடல் அயர்ச்சியைக் குறைக்கும். சிலருக்கெல்லாம் (குறிப்பாக பெரும்பகுதி வயோதிகர்களுக்கு)  உள் நோயாளியாக தங்கி நெருங்கிய சில உறவினர்கள் வந்து பார்த்தால்தான் நலமான ஒரு உணர்வே வரும். அவர்களை உள்நோயாளியாச் சேர்த்துத்தான் பார்க்க வேண்டும்.

சிலர் மாரடைப்பு வந்திருந்தாலும் வீட்டிற்குப் போய்விட்டு வருகிறேன் என்பார்கள். இதுவெறும் கேஸ்ட்ரபுள் பலமுறை வந்திருக்கிறது. இதுவரை வெறும் தண்ணீர் குடித்தாலே சரியாகிவிடும். அல்லது மார்க்கெட்டில் கிடைக்கும் அண்டாசிட் மாத்திரைக்கு சரியாகிவிடும். உங்களிடம் வந்ததற்கு ஒரு படத்தையும் எடுத்து மாரடைப்பு என்று கதை கட்டுகிறீட்கள் என்று திட்டிவிட்டு போவார்கள்.   சிலர் திரும்பிவந்து அல்லது திரும்பி வேறொரு இடத்திற்கு போய் சரிசெய்து கொள்வார்கள்.  சிலர்  திரும்ப முடியாத நிலை ஏற்பட்டதும் உண்டு,


எப்படி இருந்தாலும் தொழில் தர்மம் என்று இருக்கிறது. முடிந்தவரை அதை மீறவே கூடாது.  ( இந்த வரிகள் யூனிட் 1 மருத்துவப் பிரிவில் உள்ளுறைவிட மருத்துவ மருத்துவராக பணியாற்றிய போது தினமும்  போதிக்கப் பட்டவை)

குறிப்பாக மூன்றாம் கட்ட மருத்துவ மனையில் பணியாற்றும்போது பெரும்பாலோனோர்,  ஏற்கனவே பார்த்து திருப்தி அடையாமல் வருவார்கள். கண்டிப்பாக அவர்களுக்கு மூன்றாம் கட்ட பரிசோதனைகளை செய்துதான் ஆகவேண்டும்.


நீங்கள் முதலில் ஒரு கிளினிசியன் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இயந்திரங்களை நம்புவதைவிட உங்களை முதலில் நம்ப வேண்டும்.  இரத்த அழுத்தமானியில் காட்ட படும் ரத்த அழுத்தம் நோயாளியின் உடற்கூறுக்கு ஏற்றவகையில் அமைந்துள்ளதா என்பதை நீங்கள் கற்ற கல்வி மற்றும் அனுப்வத்தினை உபயோகப் படுத்தி உறுதி படுத்த வேண்டும். தேவைப்பட்டால் மீண்டும் செய்ய தயங்கக் கூடாது.

முதற்கட்ட மருத்துவமனையில் இருந்தாலும்கூட அவசியமான பரிசோதனை என்றால் மீண்டும் செய்யலாம். தேவையில்லை என்று நீங்கள் கருதினால் இரத்த அழுத்தத்தைக்கூட மீண்டும் பார்க்க வேண்டிய அவசியமில்லை.  குறிப்பாக செலவு பிடிக்கும்  ( ரூ.10 என்பதுகூட மீண்டும் மீண்டும் செய்தால் அனாவசியம்தான் நண்பர்களே..,)  பரிசோதனைகளை மீண்டும் செய்யச் சொன்னால் நோயாளி எரிச்சல் அடைய வாய்ப்பு உண்டு. ஆனால் அவசியத்தை புரிய வைக்க வேண்டிய மருத்துவராகிய உங்கள் கடமைதான்.


( ஒரே பென்ச்சில் அமர்த்து ஒரே வாத பிரதிவாதத்தை கேட்டு ஒரே வகையான சாட்சிகளை ஆராய்ந்த மூன்று மனிதர்களில் இருவர் அங்கு பிறந்ததை ஒத்துக் கொள்கிறார்கள். ஒருவர் ஒத்துக் கொள்ளவில்லை.  அந்த மூவருமே அந்த துறையில் கற்றுத் தேர்ந்த பலவும் சாதித்த விற்பன்னர்கள்தான்)

அதுபோல  நோயாளி வந்திருக்கும் சூழலில் அந்தப் பரிசோதனைகளின் அவசியம், ஏற்கனவே பரிசோதித்து பார்த்திருந்தாலும் இப்போதைய அவசியம், மற்றும் முக்கியத்துவத்தை விளக்க வேண்டியது மருத்துவரின் கடமைதான்.   (ஏற்கனவே ஹைக்கோர்ட்டி தீர்ப்பளித்த விவகாரங்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு போனால் மீண்டும் சாட்சிகள் அழைக்கப் படுகிறார்களே அதுபோல )

 . ஆனால் விளக்கங்கள் மிகச் சுருக்கமாக இருக்க வேண்டியது மிக அவசியம். எந்த மனிதனுமே வகுப்பு எடுக்கப் படுவதை விரும்புவதே இல்லை.  அனைத்துக்கும் மேலே நீங்கள் கற்ற கல்வியின் மேல் நம்பிக்கை வையுங்கள்.  தேர்வில் நோயாளியை வெறும் கண்ணால் பார்த்தே என்னென்ன வியாதிகளுக்கு வாய்ப்புக்கள் , பேசிப் பார்த்து என்னென்ன வியாதிகள் என்பதைக் கண்டுபிடிக்கு முறைகளை கற்றிருப்பதை உபயோகப் படுத்துங்கள்

( வேற்றுத் துறை ந்ண்பர்களுக்காக :- லேப் பரிசோதனை முடிவுகளை வைத்து தேர்வுகளில் பதில் சொல்லும்போது ஏற்படும் ஏற்படக்கூடிய தவறுகளை மன்னிக்கும் தேர்வாளர்கள்,  நோயாளியைப் பார்த்தோ, பேசியோ , அல்லது அல்லது நமது மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு (லேப், ஸ்கேண் இல்லாமல்)  தேர்வில் பதில் சொல்லும்போது ஏற்படும் சிறு தவறுகளையோ தடுமாற்றங்களையோ மன்னிப்பதில்லை. கண்டிப்பாக ஃபெயில்தான்.  இது உலகம் முழுவதும் மருத்துவத் தேர்வுகளின் அடிப்படை )

நோயாளி உங்கள் அறைக்குள் வரும்ப்போதே அவரைப் பற்றி கணிக்க ஆரம்பிக்க வேண்டும். அவர் நடந்து வரும் வேகம். அப்போது அவர் மூச்சுவிடும் எண்ணிக்கை .  கண்கள் பகுதியில் ஏற்படும் சுருக்கம். தோலில் தென்படும் வறட்சி போன்ற விவரங்கள் மிக முக்கியமானவை, அவற்றை தெளிவாக புரிந்து கொள்ளும்ப்போதே பெரும்பாலான நோய்களை கணித்துவிடலாம்.   முக்கியமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுவது வேகத்தை அதிகரிக்க உதவும். அதுவும் நோயாளிகள் ஆரம்ப சுகாதார நிலைய்த்தில நோயாளிகள் நுழையும் பகுதி உங்கள் பார்வையிலேயே இருந்தால் வரும் நோயாளிகளை அங்கிருந்தே கண்காணிக்க முடியும்.  பெரும்பாலான நோயாளிகள் வந்த உடன் வீடு திரும்பும் எண்ணத்தில்தான் இருப்பார்கள். அவர்களை முடிந்தவரை சீக்கிரம் பார்த்து அனுப்பும் வகையில் வேகத்தை வளர்க்க வேண்டும்,. அதே நேரத்தில் நோய் குறியீடுகள் எதுவும் நம் பார்வையில்         இருந்து தப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தொடர்ச்சியாக நோயாளிகளுடன் இருப்பதும் வெகுநேரம் பணியில் இருப்பதும் மிக முக்கியமானதாக அமையும்.


பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகளில் வயோதிகத்தின் காரணமாக ஏற்படும் நோய்குறியீடுகளோடு வருவார்கள். அவர்களை வயோதிக மருத்துவத்தின்(geriatrics)  துணையோடி அணுகுதல் நலம்.  இல்லையென்றால் தினமும் வந்து இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் நோய் குறியிடுகளுக்காக வைத்தியம் பார்க்க வருவார்கள். நீங்கள் இல்லையென்று சொன்னால் உங்களிடம்தான் சண்டைக்கு வருவார்கள். வயோதிகர்களிடம் சண்டைப் போட்டால் உங்களுக்கு யாரும் துணைக்கு வரமாட்டார்கள்.   பலருக்கு ரத்தப் பரிசோதனை செய்யவே பயமாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு அவசியத்தை புரியவைக்க வேண்டும். சிலருக்கு தினமும் ரத்த அழுத்தத்தைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு  அதற்கான அவசியமின்மையை புரிய வைக்க வேண்டும்.



தொடரும்...,

இந்த இடுகைகளின் தொடர்ச்சியாக இந்த இடுகை எழுதப் பட்டுள்ளது.


http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/THGGQJMRn5I/AAAAAAAABqQ/pE3QVXIh48w/s1600/Chandramukhi_Rajni_Kanth_Movie_Stills_0112_28_08.jpg




துவக்கக் கேள்விக்கு பதில் இவர்தான்.

Read more...

Tuesday, September 28, 2010

கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே

அன்புள்ள நண்பா

நலமாக இருக்கிறாயா?  நலம் என்றே நினைத்துக்கொண்டு நானும் எழுதுகிறேன். நீயும் தொடர்ந்து படி. நண்பா

உனக்கு மகிழ்ச்சியான செய்தி என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு செய்தியைப் பற்றி பகிர்ந்து கொள்ளத்தான் இந்தக் கடிதம். இந்திய மருத்துவத் துறையின் தரத்தை உயர்த்துவதற்காகவும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறைப் படுத்துவதற்காகவும் தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு வருவதைப் பற்றி மகிழ்ச்சியாக அளாவினாயே, உன் மகிழ்ச்சியில் மண்ணைப் போட வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இதை எழுதவில்லை. நண்பா..,


மருத்துவம் படித்துவிட்டாய். நமது ஊரிலேயே அரசுப் பணியிலும் சேர்ந்துவிட்டாய். என்று மகிழ்ச்சியோடு மார்தட்டினாயே . உன்னிடம்தான் சில செய்திகளை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன் நண்பா..,  நம் கிராமத்து பள்ளியில் படித்த மாணவர்கள் எல்லாம் மருத்துவம் படிக்கிறார்கள் என்று பெருமையோடு பேசித் திரிகிறாயே நண்பா,  ஒரு காலத்தில் நீ தான் முதலில் போனாயு. இப்போதெல்லாம் நம் ஊரின் எல்லா முனைகளிலிருந்தும் எம்.பி.பி.எஸ் படிக்கிறார்கள் என்று மகிழ்வாயே நண்பா.,

நீங்களெல்லாம்  இங்கு பணிக்கு வந்த பின்புதான்  ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகளுக்கு செல்லும்போது ஒரு நெருக்கமான சூழல் இருக்கிறது என்றாயே நண்பா!

தந்தையாய் வாங்கிய கடன் முடிந்துவிட்டதாம்.  எனவே இந்த ஆண்டு மேல்படிப்புக்கு அரசு கோட்டாவிலேயே சென்று மீண்டும் நம் ஊருக்கே வந்து இங்கேயே மருத்துவமனை கட்டுவேன் என்று சொன்னானே அருந்தமிழ்ச் செல்வன். அவனுக்குத்தான்  இப்போது கெட்ட நேரம். 

இனிமேல்  மேல்படிப்புத் தேர்வுகள்  இந்திய அளவிலாம.  இந்திய அரசு கொள்கை முடிவு என்று அடிபடுகிறது நண்பா. அவனால் போட்டி போட முடியுமா என்று தெரியவில்லை நண்பா,

என்ன தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பதுதான் நியதி என்கிறாயா? உண்மைதான் நண்பா, தமிழ்நாட்டில் உள்ள இடங்கள் தமிழ்நாட்டிற்கே சொந்தம் என்றால்  அவனுக்கு கண்டிப்பாக கிடைக்கும் நண்பா. உலக அளவில் அந்த மேல் படிப்பு இடத்திற்கான அடிப்படைத் தகுதிகள் அவனுக்கு இருக்கின்றன நண்பா. பின் ஏன் அவனுக்கு கிடைப்பது சிரமம் என்கிறாயா?  திருச்சூரிலும் மும்மையிலும் டெல்லியிலும்  இளைஞர்கள் முழுநேரமும்  அந்த மேல் படிப்புப்பாக நாள் முழுவதும் படித்துவருகிறார்கள் நண்பா. இவனோ   நம் ஊர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகல் முழுக்க வேலை செய்து கொண்டிருக்கிறான். இரவிலும் பிரசவம் தொடர்பான தொலைப்பேசி அழைப்புகளில் பேசிக் கொண்டே இருப்பானே நண்பா,    இப்போதெல்லாம் நமது கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவங்கள் அதிகம் என்று பெருமையாக சொல்வாயே நண்பா. விதண்டாவாதம் செய்பவர்களுக்கு தமிழக அரசின் இணைய தளத்தை காட்டி பெருமையாக சொன்னாயே நண்பா, அதையும் மீறி பேசியவர்களிடம், பிறப்பு இறப்பு பதிவாளரின் முகவரிகளை வாங்கி அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நம்ம ஊர் பையன் நமக்காக உழைக்கிறான் என்றாயே நண்பா. அவனுக்குத்தான் இந்த அதிர்ச்சி நண்பா,

மாலை வேலையில் உங்கள் ஊரில் கிளினிக் வேறு போட்டிருக்கிறான். காசு வாங்கிக் கொண்டு வைத்தியம பார்த்தாலும் இந்த ஊரில் வைத்தியம் பார்க்க ஒருவன் வருகிறானே என்று இருமாந்து இருந்தாயே நண்பா,  அவன் அந்த கிராமத்தில் உட்காரமல் இருந்திருந்தால் ஒருவேளை அவனுக்கு மேல்படிப்பு கிடைக்குமோ என்னவோ?



சென்ற மாதம் புதிதாக சேர்ந்திருந்தானே செந்தமிழ்செல்வன். இங்கேயே இருந்து தந்தையின் கடன், தங்கையின் திருமணம் இரண்டையும் முடித்துவிட்டு  பின்னர் ஒரு வீட்டையும் கட்டும்வரை இங்கேயே இருப்பேன். பின்னர் மேற்படிப்பை முடித்துவிட்டு இங்கேயே திரும்பிவிடுவேன் என்றானே? இந்த செய்தியைக் கேட்டதும்  பெருநகரத்தில் ஒரு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தது மட்டுமல்லாமல் தனியாக கோச்சிங் வகுப்புகளுக்கும் செல்ல ஆரம்பித்துவிட்டானாம். இவனைப் போல் எத்தனை பேர் கிளம்பப் போகிரார்களோ தெரியவில்லையே நண்பா?


இவர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நம் ஊரிலேயே தொடங்கு என்றெல்லாம் கனவுகளை ஊட்டினாயே நண்பா.  வெளியூரிலிருந்தெல்லாம் கூட அதிகப் பேர் பயன்பெருவார்கள் என்றாயே நண்பா,    கனவு கானல் நீர் ஆகிவிடும்போல இருக்கிறதே நண்பா..,


இது மட்டும் அல்ல நண்பா, இன்னும் இருக்கிறது.

மருத்துவம் சேரவே  இனி பொது நுழைவுத் தேர்வாம்.  ஆமாம் நண்பா இனிமேல் ஐ.ஏஎஸ் தேர்வு போலத்தான்.  மாநிலத்திலிருந்து 30 பேர் 40 பேர் எம் பி பிஎஸ் சேர்ந்து விட்டார்கள் என்று செய்திவந்தாலும் ஆச்சரிய படத் தேவையில்லை. அந்த ஐ, ஏ, எஸ்ஸிலும் முதல் முறையே சேருபவர்கள் குறைவுதான் நண்பா,  நம் கிராமத்திலிருந்து சென்றதால்தான் மேற்கண்டவர்கள் எல்லாம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிலையாக இருந்தார்கள் என்று சொல்லி வருவாயே நண்பா, அந்த கிராமத்து மாண்வர்களுக்கு இந்த பழம் புளிக்கும் என்று ஆகி விடுமோ என்ற அச்சம் தோன்றிக்கொண்டேதான் இருக்கிறது நண்பா,   பெருநகர மாணவர்களாலேயே இந்த போட்டியில் பங்கெடுப்பதும் வெல்வதும் மிகக் கடிமாகவே இருக்கும் நண்பா,  எம்பிபிஎஸ் சேர தேவையாக அனைத்து தகுதிகளும் இருந்தும் போட்டித் தேர்வில்  வெல்ல முடியாமல் போய் ..   சே.......  நினைத்தாலே நெஞ்சம் பதருகிறது நண்பா,    வெளி மாநில மாணவர்கள் இங்கு வந்து படித்து பின்னர் நம் கிராமத்திற்கு வந்து  என்ன கொடுமைடா சாமி,   ஏனோ  பாரதிராஜாவின் சத்யஜித் நினைவிற்கு வந்து தொலைக்கிறார்,


நண்பா இந்த சூழலில் தமிழக மக்களின் நலனை கருத்தில்கொண்டு தமிழக முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் ஓரணியில் நின்று போராடி வருகிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றியடையவும், தமிழக மக்களின் நலன்களைக் காக்கவும் நண்பா, முடிந்த வரை பிராத்தனை செய் நண்பா,  உண் நண்பர்களையும் செய்யச் சொல் நண்பா,


நன்றி

உனது நண்பன்

மின்னஞ்சலில் படிப்பவர்கள் தளத்திற்கும் ஒரு முறை வந்து கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். நன்றி

Read more...

Wednesday, August 11, 2010

இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..?

அவர் அந்த ஊரின் பெரிய பணக்காரர். அவரின் மனைவிக்கு கடுமையான நெஞ்சுவழி. ஏறக்குறைய நேரம் இரவு 11ஐ தாண்டி விட்டது. நகரத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து கிலோமீட்டர் தாண்டியிருக்கும் கிராமம் அது. சற்று பெரிய கிராமம். (வாசு, ரவிக்குமார் படங்களில் காட்டப் படுவது போன்றது).

வழக்கமாக அந்த ஊரில் அந்த அம்மாவிற்கு ஊசி போடுபவர் எங்கோ வெளியூர் போய்விட்டார். இப்போது என்ன செய்வது என பண்ணையாரும் அவரது கைத்தடிகளும் மண்டையை பயங்கரமாக கசக்கிப் பிளிந்து கொண்டிருந்தனர். அப்போது கணக்குப் பிள்ளை ஒரு வழியைக் கூறினார். அந்த ஊரின் அருகிலுள்ள ஊரில் ஒரு ஆரம்ப சுகாரார நிலையம். அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிதாக ஒரு மருத்துவர் வந்திருந்தார். அவரின் தந்தைதார் இதே ஊரில் ஏற்க்குறைய பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன் ஆசிரியாராய் பணியாற்றியிருந்தார். அதனால் இந்த ஊரில் இருந்த சில பெருந்தலைகள் அவருக்கு ஓரளவுக்குப் பழக்கம். அதனால் இதே ஊரில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து அங்கேயே தங்க ஏற்பாடு செய்திருந்தார்.

கணக்குப் பிள்ளை சொன்னவுடன் பணக்காரருக்கும் அதுவே சரியான யோசனையாகப் பட்டது. மருத்துவரை அழைக்க பணக்காரரின் கார் புறப்பட்டது. அங்கே மருத்துவரின் வீட்டுக் கதவு தட்டப் பட்டது. மருத்துவர் வந்தார். தான் இன்று மருத்துவ முகாமிற்கு சென்றிருந்ததாகவும் சற்றுமுந்தான் வந்ததாகவும் தெரிவித்தார்.

அவசியமென்றால் நோயாளியை இங்கு அழைத்துவாருங்கள் பார்க்கிறேன்
என்று மருத்துவர் தெரிவித்தார்.

தாய் அவுக இங்கெல்லாம் வரமாட்டாக.. அதுவும் நெஞ்சுவலின்னு சொல்றோம் . வா டாக்டர். இது கைத்தடிகள்.

மருத்துவர் தனக்கு முடியவில்லைஎன்று மறுக்க மருத்துவரின் தந்தைக்கு அலைபேசி பறந்தது. தந்தையார் மகனிடம் அலைபேசியில் பேசினார். சூழ்நிலைக்கு தகுந்தது போல் அனுசரித்துப் போகுமாறும் பெரிய குடும்பத்தினை பகைத்துக் கொள்ளவேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டது.

மருத்துவர் புறப்பட்டுப் போனார். அங்கே போய் பார்த்த போது பண்ணைக் காரின் மனைவி பெரிய சைஸ் கலர் டி.வி.யில் ஏதோ நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஈ. சி. ஜி. பரிசோதனை எடுக்க வேண்டுமே...

அதெல்லாம் எடுத்திருக்கிறோம். பல்வேறு பரிசோதனைகளும் செய்திருக்கிறோம். என்று பெரிய புத்தகத்தை எடுத்து கையில் கொடுத்தனர். மருத்துவர் பார்த்தார். அது நானூறு கி.மீ. தூரத்தில் இருக்கும் பெருநகரத்தில் பார்த்த மருத்துவ குறிப்புகளின் தொகுப்பு.

பயப்பட ஒன்றும் இல்லை. இது சாதாரண வலிதான்
இது மருத்துவர்.

நானும் இதைதான் டாக்டர் சொன்னேன். இதுக்குப் போய் டவுனுக்கு கூப்பிடறாங்க .. நான் தான் இங்கிருக்குறவரையே கூப்பிட்டு ஊசிப் போட்டுக்கலாம்னு சொன்னேன். இது பண்ணைக்காரர் மனைவி.

மருத்துவர் தான் வந்த வேலையை முடித்துவிட்டு கிளம்பும்போது அவருக்கு ஃபீஸ் எவ்வளவு எனக் கேட்கப்பட்டது. மருத்துவரும் பெருந்தன்மையாக
அப்பாவுக்குத் தெரிஞ்சவர்ன்னு சொல்லறீங்க . என்க்கு ஃபீஸ் எதுவும் வேண்டாம். என்றார் மருத்துவர்.

டாக்டர் அப்படியெல்லாம் நீங்கள் மறுக்கக் கூடாது. கண்டிப்பாக நீங்க வாங்கிக் கொண்டே தீர வேண்டும். என்று கையில் பணத்தினை திணித்தனர். அது ஒரு பத்து ரூபாய். ( அப்போது அந்த ஊரில் ஒரு டீயின் விலை 2.50)

மருத்துவர் அதிர்ச்சியில் நின்றிருக்க அவர்களே தொடர்ந்தனர். டாக்டர் நாங்க எப்போதும் 5தான் கொடுப்போம். நீங்க நம்ம வாத்தியாரோட பையன் அப்படிங்கறதால 10 கொடுத்திருக்கிறோம்.

( அந்த ஊரில் அந்த அம்மாவுக்கு எப்போதும் ஊசி போடுபவர் ஒரு அனுபவரீதியில் ஆனவர். அவருக்குத்தெரிந்த நாலைந்து மருந்துகளை வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருப்பவர். மக்கள் அவரையும் இவரையும் ஒரே தட்டில் வைத்து பார்த்திருக்கின்றனர்)

Read more...

Monday, August 9, 2010

ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் நடைமுறை குறிப்புகள் 1. மனித வள நிர்வாகம்

உங்க வயசு பசங்களுக்கு அட்வைசும் புடிக்காது, அத சொல்ரவங்களையும் புடிக்காது. இது அட்வைஸ் இல்ல, அக்கறை
- பாலகுமாரன்
(நாவல் அல்ல, திரைப்படம் !!
எந்த படம் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு பாராட்டுக்கள்
)


ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக பணியில் சேரும் மருத்துவ அலுவலர்களுக்கான மனித வள நிர்வாகம் குறித்து (Human Resources Management or simply Man Management) சில அறிவுரைகள்
  1. மருத்துவ அலுவலரே தான் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைவர் - the boss of the PHC.
  2. புற நோயாளி சிகிச்சை மட்டும் பார்த்தால் போதாது. அங்கு பணிபுரியும் அனைவரும் தத்தமது வேலைகளை ஒழுங்காக செய்கிறார்களா என்பதையும் அவர் கண்காணிக்க வேண்டும்
  3. மருத்துவ அலுவலருக்கு இரு கடமைகள் 1. மருத்துவர் 2. அலுவலர். உங்களுக்கு மருத்துவர் பணி தவிர அலுவலர் பணியும் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள தவறாதீர்கள்
  4. உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் செய்வதற்கும் செய்யாததற்கும் நீங்கள் தான் பொறுப்பு. உங்கள் மேலதிகாரிகள் உங்களைத்தான் கேட்பார்கள்
  5. நீங்கள் உங்கள் கீழ் பணிபுரிபவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். ஆனால் நீங்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயங்களில் நீங்கள் முடிவெடுங்கள். உங்கள் பணியாளர்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயங்களில் தலையிடாதீர்கள்.
  6. நீங்கள் அமர்ந்திருப்பது மருத்துவ அலுவலரின் நாற்காலியில் தானே தவிர துனை இயக்குனரின் நாற்காலியிலோ அல்லது மருந்தாளுனரின் நாற்காலியிலோ அல்ல என்பதை நீங்கள் மறக்காதீர்கள்
  7. உங்கள் பணி உங்களுக்கு அரசிடம் இருந்து / இயக்குனரிடமிருந்து / துனை இயக்குனரிடமிருந்து வரும் உத்தரவுகளை நிறைவேற்றுவது. அது தொடர்பாக உங்கள் கீழுள்ளவர்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்பதை கண்காணிப்பது
  8. உங்கள் பணியாளர்களின் ஆலோசனைகளை / வேண்டுகோள்களை / உத்தரவுகளை !! அப்படியே நிறைவேற்ற வேண்டுமென்பதில்லை
  9. நீங்கள் செய்ய வேண்டிய செயல் ஒன்றில் நீங்கள் உங்கள் பணியாளர்களின் அறிவுரைகளின் படி செயல்பட்டால் கூட நீங்கள் செய்ய வேண்டிய அந்த செயலுக்கு முழு பொறுப்பும் நீங்கள் தான் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்
  10. இதை மறுமுறை வாசித்து கொள்ளுங்கள்
  11. ஆரம்ப சுகாதார நிலையத்தில் அண்ணா / அக்கா / தங்கச்சி போன்ற பாசமலர் உறவுகளை தவிர்ப்பது அனைவருக்கும் நல்லது (உங்கள் கல்லூரி காலங்களில் இது போன்ற பாசமலர்கள் எங்கு சென்று முடிந்தது என்பது தெரியும் தானே !!)
  12. ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் தேவையில்லாத பாச பரிமாற்றங்களினால் உங்களுக்கும் பிரச்சனை, மற்றவர்களுக்கும் பிரச்சனையே
  13. யாரையும் முழுவதும் நம்ப வேண்டாம். யாரையும் முழுவதும் உதாசீனப்படுத்த வேண்டாம்
  14. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் (எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு)
  15. நீங்கள் அதிகாரி என்பதால் குற்றம் கூறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை.
  16. யாராவது ஏதாவது தவறு செய்திருந்தாலும் பொது இடத்தில் வைத்து அதை சுட்டிக்காட்டாதீர்கள். மற்றவர்கள் முன் நீங்கள் ஹீரோவாக வேண்டும் என்பதற்காக அடுத்தவரின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்
  17. பணியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்ட நேரும் போது “இதை இப்படி செய்வதற்கு பதில் இப்படி செய்ய வேண்டும்” என்றே கூற வேண்டும் “நீ செய்தது தவறு” என்று முகத்தில் அடித்தது போல் கூறுவது நன்றன்று. உங்கள் கீழ் பணிபுரிபவர்களில் ஏறத்தாழ அனைவரும் உங்களை விட வயதில் பெரியவர்கள் என்பதை மறக்க வேண்டாம்
  18. வார ஆய்வு பதிவேட்டிலும், வார ஆய்வு கூட்ட குறிப்பு புத்தகத்திலும் தேவைப்படும் மாற்றங்களை எழுதி அனைவரிடமும் கையொப்பம் வாங்குவது எளிய வழி
  19. எதிர்பாலின ஊழியர் ஒருவருடன் அறையில் தனியாக பேச வேண்டாம். ஒன்று மூன்றாம் நபர் உடனிருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். அல்லது பொது இடத்தில் பேசவும்
  20. உங்கள் அறையில் தேவையில்லாமல் யாரும் அமர வேண்டாம்
  21. அனைவரையும் உட்கார வைத்து பேசுங்கள். நிற்க வைத்து பேச வேண்டாம்
  22. உங்கள் தனிப்பட்ட வேலைகளை ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் அளிக்காதீர்கள்
  23. பிற மருத்துவ அலுவலர்களை பற்றியோ, துனை இயக்குனரை பற்றியோ யாராவது பேசினால் ஊக்குவிக்க வேண்டாம்
  24. உங்களுடம் பணிபுரியும் மருத்துவ அலுவலருடன் கருத்து வேறுபாடு என்றால் நேரடியாக பேசி சுமூக தீர்வு காண முயலுங்கள்
  25. அப்படியும் சரி வரவில்லை என்றால் சங்க நிர்வாகிகள் மூலம் பேசலாம். நீங்கள் இருவரும் ஒரே கல்லூரி என்றால் கல்லூரியில் உங்களிருவருக்கும் தெரிந்த மூத்த மருத்துவர் மூலம் தீர்வு காண முயலுங்கள்.
  26. உங்களுடம் பணிபுரியும் மருத்துவ அலுவலருடன் கருத்து வேறுபாடு பிரச்சனையை துனை இயக்குனரிடமோ, அல்லது உங்கள் கீழ் பணி புரிபவரிடமோ கொண்டு செல்ல வேண்டாம்

Read more...

விக்ரம் திரைப்படமும், நள்ளிரவில் நாய் கடி வாங்கியவனும்

புகுமுன்:-

சினிமா தொடர்புடைய இடுகையாக இருந்தாலும் இது சினிமா  இடுகை அல்ல

=========================================================================

டாக்டர் என்னும் தொழிலாளி 


பத்து நோயாளிகளை வர வைக்கும் வழிகள் 


ஆகிய இடுகைகளின் தொடர்ச்சியாகவே இதை எடுத்துக் கொள்ளலாம்.




வெகுநாட்களுக்கு முன் விக்ரம் நடித்த சமுராய் படத்தினைப் பார்த்திருப்பீர்கள். நானும் அப்போது பார்த்ததுதான். சமீபத்தில் தொலைக்காட்சியில் கூட அதைப் போட்டிருந்தார்கள்.  படம் எப்படியிருந்தாலும்., அந்தப் படத்தின் முதுகெலும்பாலான ஃபிளாஷ்பேக் காட்சியில் குளுக்கோஸ் உடன் திரவ மருந்து செலுத்துவார் நாயகி (அந்தப் பகுதியின் நாயகி). அந்தச் சிறுவன் இறந்து போய் விட தான் மிகவும் கஷ்டப் பட்டு பார்த்துவந்த சிறுவன் இறந்து விட்டதாகவும்  அந்த கலங்கிப் போன தூசுகள் படிந்த திரவ மருந்தை செலுத்தியதால்தான் இறந்து போனதாகவும் அந்த மருந்து வாங்கியவர்களை தட்டிக் கேட்பார். சில தட்டிக் கழித்தல்களுக்குப் பின் அவர் இறந்து விடுவார். விக்ரம் பழிவாங்க ஆரம்பிப்பார்.


=================================================================


உண்மையில் இந்த நிகழ்ச்சியில் தவறு என்பது குளுக்கோஸ் ஏற்றிய அந்த நாயகின் மீதுதான். எந்த மருத்துவர் எந்த மருந்தினைச் செலுத்தினாலும் அந்த பாட்டில் உடைந்து இருக்கிறதா?  மருந்தின் நிறம் மாறி இருக்கிறதா? அதில் ஏதாவது மிதக்கிறதா?  அதன் காலாவதி தேதி இன்னும் எத்தனை நாட்களுக்கு என்றெல்லாம் சரிபார்த்துவிட்டுத்தான் போட வேண்டும். 


ஆகவே புதிதாக கிளினிக் தொடங்கும் மருத்துவர்கள் இந்த நடைமுறைகளை ஒவ்வொரு முறையும் பின்பற்றியே தீர வேண்டும்,. இல்லையென்றால் விக்ரம் மாதிரி யாராவது வந்து கடத்திக் கொண்டு போக நேரிடலாம். 




=====================================================================


தொடரும்....,

 ====================================================================

அது ஒரு கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம்.  

இரவு நேரம், பிரசவம் பார்ப்பதற்காக அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் காத்திருந்தனர். நள்ளிரவு தாண்டிய நேரம்  சில பல நபர்கள். டாக்டர் நாய் கடிச்சிடிச்சி என்று கூறிக் கொண்டே வந்தார்கள்.   


செவிலியர் பார்த்தார்.  சில முதலுதவிகள் மற்றும் தடுப்பூசி, தொற்றுப் பரவாமல் இருக்க ஊசி போட்டுவிட்டு  நாய்கடிக்கான சிறப்புத் தடுப்பூசி நாளைக் காலையில் மருத்துவர் முன்னிலையில் போட வேண்டும். காலையில் வாருங்கள் என்றிருக்கிறார்.  நண்பர்களுக்கு பயங்கர கோபம்.  கண்டபடி சண்டைப் போட்டுவிட்டு திரும்பி விடுகின்றனர்.  




காலையில் கிளம்பி மருத்துவமனைக்குப் போகிறார்கள்.  பயங்கரமாக பில்டப் மற்றும் அடிபொடிகளைச் சேர்த்துக் கொண்டு  சுகாதார நிலைய வாசலில் சண்டை போடுகிறார்கள். 


மருத்துவரின் அறை முன்னும் சத்தம் போட்டுக்கொண்டே உள்ளே போகிறார்கள்.  நள்ளிரவில் நாய் கடியோடு  வந்தால் செவிலியர் நீங்கள் வந்த உடந்தான் போடுவேன் என்கிறார்.  என்ன இது அநியாயம்? நீங்க வந்தது தெரிந்த பிந்தான் நாயைக் கடிக்க சொல்ல வேண்டுமா?  


மருத்துவர் பொறுமையாக நாய் க்டி ஊசி எத்தனை மணி நேரத்துக்குள் போட வேண்டும். உடனடியாக கொடுக்கப் பட வேண்டிய மருந்துகள் கொடுக்கப் பட்டு விட்டன் என்பது பற்றியெல்லாம் சொல்லு விட்டு அந்தக் கேள்வியைக் கேடிகிறார்.




நள்ளிரவுக்கு மேல் எங்கு போய் நாய் கடி வாங்கி வந்தாய்? உனக்கு அங்கே என்ன வேலை?  


உடன் வந்த நண்பர்கள் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க நாய்கடி பட்ட நபர் ஊசி போடுமுன்பே எஸ்கேப்..............,

Read more...
அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP