இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..?
அவர் அந்த ஊரின் பெரிய பணக்காரர். அவரின் மனைவிக்கு கடுமையான நெஞ்சுவழி. ஏறக்குறைய நேரம் இரவு 11ஐ தாண்டி விட்டது. நகரத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து கிலோமீட்டர் தாண்டியிருக்கும் கிராமம் அது. சற்று பெரிய கிராமம். (வாசு, ரவிக்குமார் படங்களில் காட்டப் படுவது போன்றது).
வழக்கமாக அந்த ஊரில் அந்த அம்மாவிற்கு ஊசி போடுபவர் எங்கோ வெளியூர் போய்விட்டார். இப்போது என்ன செய்வது என பண்ணையாரும் அவரது கைத்தடிகளும் மண்டையை பயங்கரமாக கசக்கிப் பிளிந்து கொண்டிருந்தனர். அப்போது கணக்குப் பிள்ளை ஒரு வழியைக் கூறினார். அந்த ஊரின் அருகிலுள்ள ஊரில் ஒரு ஆரம்ப சுகாரார நிலையம். அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிதாக ஒரு மருத்துவர் வந்திருந்தார். அவரின் தந்தைதார் இதே ஊரில் ஏற்க்குறைய பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன் ஆசிரியாராய் பணியாற்றியிருந்தார். அதனால் இந்த ஊரில் இருந்த சில பெருந்தலைகள் அவருக்கு ஓரளவுக்குப் பழக்கம். அதனால் இதே ஊரில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து அங்கேயே தங்க ஏற்பாடு செய்திருந்தார்.
கணக்குப் பிள்ளை சொன்னவுடன் பணக்காரருக்கும் அதுவே சரியான யோசனையாகப் பட்டது. மருத்துவரை அழைக்க பணக்காரரின் கார் புறப்பட்டது. அங்கே மருத்துவரின் வீட்டுக் கதவு தட்டப் பட்டது. மருத்துவர் வந்தார். தான் இன்று மருத்துவ முகாமிற்கு சென்றிருந்ததாகவும் சற்றுமுந்தான் வந்ததாகவும் தெரிவித்தார்.
அவசியமென்றால் நோயாளியை இங்கு அழைத்துவாருங்கள் பார்க்கிறேன்
என்று மருத்துவர் தெரிவித்தார்.
தாய் அவுக இங்கெல்லாம் வரமாட்டாக.. அதுவும் நெஞ்சுவலின்னு சொல்றோம் . வா டாக்டர். இது கைத்தடிகள்.
மருத்துவர் தனக்கு முடியவில்லைஎன்று மறுக்க மருத்துவரின் தந்தைக்கு அலைபேசி பறந்தது. தந்தையார் மகனிடம் அலைபேசியில் பேசினார். சூழ்நிலைக்கு தகுந்தது போல் அனுசரித்துப் போகுமாறும் பெரிய குடும்பத்தினை பகைத்துக் கொள்ளவேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டது.
மருத்துவர் புறப்பட்டுப் போனார். அங்கே போய் பார்த்த போது பண்ணைக் காரின் மனைவி பெரிய சைஸ் கலர் டி.வி.யில் ஏதோ நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஈ. சி. ஜி. பரிசோதனை எடுக்க வேண்டுமே...
அதெல்லாம் எடுத்திருக்கிறோம். பல்வேறு பரிசோதனைகளும் செய்திருக்கிறோம். என்று பெரிய புத்தகத்தை எடுத்து கையில் கொடுத்தனர். மருத்துவர் பார்த்தார். அது நானூறு கி.மீ. தூரத்தில் இருக்கும் பெருநகரத்தில் பார்த்த மருத்துவ குறிப்புகளின் தொகுப்பு.
பயப்பட ஒன்றும் இல்லை. இது சாதாரண வலிதான்
இது மருத்துவர்.
நானும் இதைதான் டாக்டர் சொன்னேன். இதுக்குப் போய் டவுனுக்கு கூப்பிடறாங்க .. நான் தான் இங்கிருக்குறவரையே கூப்பிட்டு ஊசிப் போட்டுக்கலாம்னு சொன்னேன். இது பண்ணைக்காரர் மனைவி.
மருத்துவர் தான் வந்த வேலையை முடித்துவிட்டு கிளம்பும்போது அவருக்கு ஃபீஸ் எவ்வளவு எனக் கேட்கப்பட்டது. மருத்துவரும் பெருந்தன்மையாக
அப்பாவுக்குத் தெரிஞ்சவர்ன்னு சொல்லறீங்க . என்க்கு ஃபீஸ் எதுவும் வேண்டாம். என்றார் மருத்துவர்.
டாக்டர் அப்படியெல்லாம் நீங்கள் மறுக்கக் கூடாது. கண்டிப்பாக நீங்க வாங்கிக் கொண்டே தீர வேண்டும். என்று கையில் பணத்தினை திணித்தனர். அது ஒரு பத்து ரூபாய். ( அப்போது அந்த ஊரில் ஒரு டீயின் விலை 2.50)
மருத்துவர் அதிர்ச்சியில் நின்றிருக்க அவர்களே தொடர்ந்தனர். டாக்டர் நாங்க எப்போதும் 5தான் கொடுப்போம். நீங்க நம்ம வாத்தியாரோட பையன் அப்படிங்கறதால 10 கொடுத்திருக்கிறோம்.
( அந்த ஊரில் அந்த அம்மாவுக்கு எப்போதும் ஊசி போடுபவர் ஒரு அனுபவரீதியில் ஆனவர். அவருக்குத்தெரிந்த நாலைந்து மருந்துகளை வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருப்பவர். மக்கள் அவரையும் இவரையும் ஒரே தட்டில் வைத்து பார்த்திருக்கின்றனர்)