Monday, March 29, 2010

குழந்தையும் குலதெய்வமும்

ஒரு சுபயோக சுபதினத்தில் முருகனின் பொற்பாதத்தில் அமைந்துள்ள அ.ஆ.சு.நி.இல் பிறந்த ஒரு சுட்டிக்குழந்தையின் முதல் நாள் வாழ்க்கையிது. கலாச்சாரமும் தெய்வபக்தியும் நிறைந்த தந்தையும், பதிபக்தி நிறைந்த தாயும், மண்ணின் மணம் நிறைந்த தாத்தா, பாட்டியும் வாய்க்கப்பட்டவன் இவன்.

குழந்தைபிறந்த உடன் தாயின் அருகில் குழந்தையை கிடத்திவிட்டு செவிலியர் அடுத்த பிணியாளரை பார்க்கப் போன சைக்கிள் சந்தில் நடந்த கதை.
ஐந்து நிமிடம் கழித்து வந்த செவிலியர் தாயை பரிசோதித்தார். அடுத்து சேயை.............. ஐயோ, சேயைக்காணவில்லை.

செய்தி பரபரப்பானது. ஒரு கிராமத்தில், ஆஸ்பத்திரியில் அதுவும் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை காணவில்லை என்றால் நினைத்துப்பாருங்கள். அபூர்வ சகோதரர்கள் மனோரமா ஆச்சியிலிருந்து சூரிய வம்சம் சரத்குமார் வரை அனைவரும் ஆஜர்.

பலபல வதந்திகள். ஆஸ்பத்திரி ஊழியர் விற்றுவிட்டார் என்று ஒரு கூட்டம். பில்லி சூனியக் காரர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர் என்று ஒரு கூட்டம்.ஆண்குழந்தை அல்லவா! பங்காளிகள் சண்டையாம்.

அ.ஆ.சு.நி.ஊழியர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கின்றார்கள். போலிசுக்கு தகவல் சென்றது. விசாரணையும் தொடர்ந்தது.
நமது மனோரமா பாட்டி மீண்டும் டென்சன் ஏற்றினார். அய்யய்யோ, அய்யோ, இப்பத்தான் வந்துட்டுப்போனானே, அப்பக்காரன், அவன் திரும்பி வந்து கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன். அய்யய்யோ, அய்யோ.

இப்போது பரபரப்பு பரபரபரபரப்பானது. குழந்தையின் தாத்தா பேச ஆரம்பித்தார். மாப்பிள்ளை வந்திட்டாரா அவர கூப்பிடுங்கப்பா, எங்க போனார் இந்த நேரத்தில. மாப்பிள்ளை(குழந்தையின் தந்தை)யின் நண்பர்களுக்கு தகவல் போனது.

சல்லடை போட்டு தேட ஆரம்பித்து கூட்டி வந்தனர்.
அவர் வந்தார் அவருடைய குழந்தையோடு.. முழு போதையில் இருந்த அவர் கூறினார். வாரிசு வந்திரிச்சில்ல..... குலதெய்வம் கோவிலுக்குப் போய்ட்டு வந்தோம்..............................பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு

Read more...

Sunday, March 7, 2010

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -1


மார்பகம் என்றால் என்ன?

ஒவ்வொரு மார்பகமும் லோப்ஸ் (lobes) எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்பு சதைகளானது. ஒவ்வொரு சதையும் லோப்யூல்ஸ் (lobules) எனப்படும் பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும் சில டஜன் குமிழ்களாக முடியும். இத்தகைய மடிப்புத்தொங்கு சதைகள், சதைகள், சிறு இதழ்கள் முனைப் பகுதி குமிழ்கள் அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்றிணைக்கின்றன. இந்த இழை நாளங்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள ஆரியோலா (areole) எனப்படும் கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில் ஒன்றிணைகின்றன. சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும் இடையேயுள்ள இடைப்பகுதியைக் கொழுப்புப் பொருட்கள் நிறைக்கின்றன. மார்ப்கத்தில் சதைப்பற்று ஏதும் இருக்காது. ஆனால் மார்ப்கத்தின் அடிப்பகுதியில் சதைப்பற்று இருந்து விலா எலும்புகளை மறைக்கின்றன.


ஒவ்வொரு மார்பகமும் இரத்த நாளங்களையும் லிம்ப் (lymph) எனப்படும் வர்ணமற்ற நிணநீர் திரவத்தை எடுத்துச் செல்லும் நாளங்களையும் கொண்டுள்ளது. இந்த லிம்ப் நாளங்கள் அவரை விதை வடிவிலுள்ள லிம்ப் நோட்ஸ் (Nodes )எனப்படும் முடிச்சுகளில் செல்லுகின்றன. இத்தகைய லிம்ப் நோட்ஸ்கள் கூட்டங் கூட்டமாக அக்குகளின் மேழேயும் தோற்பட்டை எலும்புகளின் மேலும் மார்ப்கங்களிலும் உள்ளன. இத்தகைய லிம்ப் நோட்ஸ் உடலின் மற்ற பல பாகங்களிலும் உள்ளன.


மார்பக புற்று நோய் என்றால் என்ன?

மார்பக புற்று நோய் என்றால், மார்பகத்தில் உள்ள சில செல்கள் அளவுக்கதிகமாக வளர்வதாகும். புற்று நோய் செல்கள் மற்ற செல்களைக் காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருக்கும். அவை வேகமாகப் பிரிந்து வளர்ந்து சுற்றிலுமுள்ள திசுக்களை
ஆக்கிரமிக்கும்

மார்பக புற்று நோயின் அறிகுறிகள் என்ன?

துவக்க நிலை மார்பக புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பக புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும் அறிகுறியும் இருக்காது. புற்றுநோய் வளர வளர கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்படும்.

1, வீக்கம் அல்லது மார்பகம் அல்லது அக்குள் பகுதி தடிக்கும்.



2. மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும்



3. முலைக் காம்பிலிருந்த இரத்தமோ வேறு திரவமோ கசியும்.


4. மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், முலைக்காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும். (குழிவிழுதல், மடிப்பு விழுதல், சொரசொரத்தல்)


5. சமீப காலமாக முலைக்காம்பு உள்ளிழுத்துக் கொள்ளும்.


மேற்கண்ட மாறுதல்களில் ஏதேனும் தென்பட்டால் உடஉனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
எவ்வாறு மார்பகப் புற்றுநோய் கண்டறியப் படுகிறது?


மார்பகப் புற்றுநோயைக் கீழ்க்கண்ட முறைகளில் கண்டறியலாம்.



மருத்துவ வரலாறு:-
உங்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவ வரலாறு உதவும். உங்கள் குடும்பத்தில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்ததா? இருக்கிறதா என்று கேட்டறிவார். உங்களுடைய மாத விலக்கு விவரங்கள், உங்கள் மார்பகக் கட்டியின் புறத் தன்மைகள் குறித்து உங்களிடம் கேட்பார்.


மார்பகக் கட்டியைத் தொட்டுப் பார்த்தல்:-
உங்கள் மருத்துவர் உங்கள் மார்பகத்தைத் தொட்டுப் பரிசீலனை செய்து மார்பகக் கட்டியின் இருப்பிடம், அளவு, மார்பக லிம்ப் மற்றும் லிம்ப நோட்ஸ்களின் பொதுத்தன்மையைக் கண்டறிவார்.



மம்மோ கிராம் (mammo gram)
உங்கள் மருத்துவர் மம்மோகிராம் சோதனையைச் செய்து கொள்ளுமாறு உங்களிடம் கூறலாம். மார்பகக் கட்டிகளை, அதிலும் மிகச் சிறியவற்றைக் கண்டு பிடிக்க உதவும் ஒருவகை பயன்மிக்க மார்பகத்தை எக்ஸ்ரே பிடிக்கும் தொழில் நுட்பமாகும் இது. ஒரு தட்டு போன்ற கருவியால் உங்கள் மார்பகத்தைத் தட்டையாக அழுத்தி மார்பகத்தின் தெள்ளிய வடிவத்தை அறிய முயலப்படும். உங்கள் மார்பகக் கட்டியின் முக்கிய விவரங்களை மம்மோகிராம் உங்கள் மருத்துவருக்கு அளிக்கம். மம்மோ கிராமில் ஏதேனும் ஒரு பகுதியில் ஐயம் உண்டாக்கினாலும், தெளிவாக இல்லாவிட்டாலும் மற்றொரு எக்ஸ்-ரே எடுக்க வேண்டியிருக்கும்.


அதிரொலி (Ultra sound)
அதிர்ரொலி என்பது அதிக அதிர்வுடன் கூடிய ஒலியலைகளை மார்ப்கத்தின் மீது செலுத்தி மார்பகத்தின் கட்டி கெட்டியாக (திடமாக) உள்ளதா அல்லது திரவம் நிறைந்துள்ளதா என்று கண்டறியலாம். மம்மோ கிராபியுடனும் இந்தப் பரிசீலனையைச் செய்யலாம்.



நீடில் பயோப்சி (Needle Biopsy)
உங்கள் மருத்துவர் ஒரு மெல்லிய ஊசியால் உங்கள் மார்பகக் கட்டியிலிருந்து ஒரு சில செல்களை எடுத்து நுண்ணோக்கியில் பரிசீலித்து மார்பக புற்றுநோய் உள்ளதா இல்லையா என்று கண்டறிவார். சில சமயங்களில் ஒரு பெரிய ஊசியை கெட்டியான கட்டியின் மைய செல்களை எடுக்கப் பயன் படுத்துவார்.
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2


நன்றி:- CHANGI GENERAL HOSPITAL




இது மீள் பதிவு, மிக ஆரம்ப கட்டத்தில் நான் இட்டது.

தமிழீஷில் இன்றுதான் சேர்த்துள்ளேன். எனவே தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள். 


தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்.

Read more...

Tuesday, March 2, 2010

நீங்கள் கடைசியாக எப்பொழுது ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் சென்றீர்கள்

சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது என்றால் உங்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது

சில ஆரம்ப சுகாதார நிலையங்களின் தளங்களை பார்க்கவும்

தோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்
**
பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம்
**
அ.ஆ.சுகாதார நிலையம் அமரபூண்டி

--

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசேரியன் கூட நடைபெறுகிறது



பத்திரிகை செய்தி 1 : மதுரை
**
பத்திரிகை செய்தி 1 : திருச்சி

Read more...

Wednesday, February 24, 2010

அடடே' அரசு மருத்துவமனை! - துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையம்

அடடே' அரசு மருத்துவமனை!

அசுத்தம் இல்லை... அமுக்கல் இல்லை...

'இது உங்கள் மருத்துவமனை. சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்...' - அரசு மருத்துவமனை சுவர்களில் வழக்கமாகத் தென்படும் வாசகம் இது! இதை நிஜமாகவே படுசீரியஸாகப் பின்பற்றும் ஓர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கோவை மாவட்டம் துடியலூரில் இருப்பது சந்தோஷமான விஷயம்! தனியார் மருத்துவமனைகளுக்கு சவால் விடும் வகையில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டிருக்கும் இந்த ஆரம்ப சுகாதர நிலையம்தான், தமிழகத்திலேயே 'தி பெஸ்ட்' என அடித்துச் சொல்லுகிறார்கள் சுகாதாரத் துறையினர். சமீபத்தில், இந்த மருத்துவமனைக்கு விசிட் அடித்துச் சென்ற சுகாதாரத் துறைச் செயலாளரான சுப்புராஜ், சுத்தம் மற்றும் பணியாளர்களின் சுறுசுறுப்பைப் பாராட்டி கடிதம் அனுப்பி இருக்கிறார்.

மருத்துவமனையில் பிரசவத்துக்காக அட்மிட் ஆகியுள்ள அம்பிகா என்ற


பெண்மணியிடம் நாம் பேச்சுக் கொடுத்தபோது, ''எங்களுக்கு வசதி, வாய்ப்பு எதுவும் இல்லீங்க. தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்க முடியாது. இங்க நல்லா பிரசவம் பார்க்குறதா பக்கத்து வீட்டுக்காரங்க சொல்லி தெரிஞ்சுக்கிட்டேன். உண்மையிலே என்னை தங்கமா பார்த்துக்குறாங்க சார். எதுக்குமே பணம் கேட்காத இந்த இடத்துக்கு கடவுளா பார்த்துதான் என்னைய அனுப்பியிருக்கான்!'' என்றார் நெகிழ்ச்சியோடு.

அத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் என்று சுட்டிக்கட்டப்படும் பெரியநாயக்கன்பாளையம் வட்டார மருத்துவ அலுவலரான (பொறுப்பு) உமா மகேஸ்வரியை சந்தித்தோம்.

''இன்னிக்கு இருக்குற தலைமுறையில் சுத்தம், சுகாதாரத்துக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக் குறாங்க. அதுக்கு ஏத்த மாதிரி நாமளும் மாறித்தானே ஆகணும்! துடியலூர் சுகாதார நிலையத்துல முந்தி குப்பையாத்தான் இருந்துச்சு. அந்த ஏரியாவையே மாத்திக்காட்டணும்னு முடிவு பண்ணேன். போன வருஷம் அந்த சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கி இருந்த 1.75 லட்சம் ரூபாயை வெச்சுக்கிட்டு,உள்கட்டமைப்புகளை முழுசா மாத்தி அமைக்குற வேலையை ஆரம்பிச்சோம். இதைப் பாத்துட்டு, 'சூப்பர்'னு பாராட்டுன பொது சுகாதாரத் துறை உயரதிகாரிங்க, தேவையான அளவுக்கு பணம் ஒதுக்கீடு பண்ணினாங்க.

டாக்டர்கிட்ட, நோயாளிங்க மனம்விட்டு ரிலாக்ஸா பேசுறதுக்காக, தனியார் மருத்துவமனையில கேபின் அமைச்சிருப்பாங்க. அதுமாதிரி, எங்க டாக்டர்களுக்கும் தனித்தனி கேபின் அமைச்சுக் கொடுத்தோம். மருந்து, மாத்திரைகளை தனித்தனியா பிரிச்சு வைக்குறதுக்காக பார்மஸியையும் மேம்படுத்தினோம்.

இங்கே ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள்தான் பிரசவத்துக்கு அதிகளவுல வர்றாங்க. அவங்க கொண்டு வர்ற மாற்றுத் துணிகளைப் பத்திரப்படுத்தி வைக்கிறதுக்கு இடமே இல்ல. அதுக்காக தனித்தனி லாக்கர் வசதி செஞ்சு கொடுத்தோம். ஏழைப் பெண்களால கைக்குழந்தைக்கு போட்டுவிடுறதுக்கு டிரஸ் வாங்ககூட முடியாத நிலைமை இருக்கு. ரொம்பப் பேரோட வீடுகளோட நிலைமையும் மோசமா இருக்கு. அதனால, எங்க ஆரம்ப சுகாதார நிலையத்துல ஆண் குழந்தை பொறந்தா நீல நிறத்துல இருக்குற மெத்தையும் , பெண் குழந்தைன்னா பிங்க் கலர் மெத்தையும் இலவசமா கொடுக்குறோம். அந்த மெத்தைக்குள்ளே ஒரு செட் துணியும் இருக்கும். அந்த பச்சிளம் குழந்தைகளுக்காக கரூர்ல இருந்து ஆர்டர் பண்ணி மெத்தையை வாங்கிக் கொடுக்குறோம்.

பெண்கள் கருவுற்ற 25 வாரம் முதல் 30 வாரத்துக்குள்ள ஸ்கேன் செஞ்சு பாத்துடுறது நல்லது. அப்போத்தான் குழந்தை என்ன நிலையில வயித்துக்குள்ள இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியும். எங்ககிட்ட இருக்குறது 'ரெசல்யூஷன்' குறைவான ஸ்கேன் இயந்திரம். இதுல அத்தனை துல்லியமான ரிப்போர்ட் கிடைக்காது. அதுக்காக கோவை ஆர்.எஸ்.புரத்துல இருக்குற ஒரு தனியார் ஸ்கேன் சென்டர்ல உதவி கேட்டோம். அவங்களும் தயங்காம இலவசமா ஸ்கேன் எடுத்துக் கொடுக்குறாங்க. இதுவரைக்கும் ஆயிரத்து 300 ஸ்கேன் எடுத்துக்கொடுத்திருக்காங்கன்னா பாருங்களேன். அதோட மதிப்பு மட்டும் 14 லட்சம் ரூபாய். இந்த மாதிரி நல்லவங்க உதவியும் சேர்ந்திருப்பதால்தான், தரமான சிகிச்சையை ஏழைகளுக்கும் கொடுக்க முடியுது.

வாரந்தோறும் புதன்கிழமை குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கிட்டு இருக்கோம். குழந்தைகளைக் கொண்டு வர்ற பெற்றோருக்கு, தடுப்பூசி போடுற மையத்துல உட்கார்றதுக்குக்கூட இடவசதி இல்லாம இருந்துச்சு. அந்த இடத்துல இப்போ 30 பேரு உட்கார்ற அளவுக்கு இட வசதியை உருவாக்கிட்டோம். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் புறநோயாளிகள் 400 பேருக்கு மேல வர்றாங்க. அவங்க யாருமே வரிசையா வராததால, ஒரே தள்ளுமுள்ளு நிலைமை இருந்துச்சு. அந்தப் பிரச்னையை சரிசெய்யுறதுக்காக டோக்கன் சிஸ்டத்தை கொண்டு வந்திருக்கோம். புற நோயாளிகள் வந்தா, அவங்க கையில டோக்கனை கொடுத்துடுவோம். டோக்கன் நம்பரைக் கூப்பிட்டா மட்டும் டாக்டரைப் பார்க்குறதுக்கு அவங்க உள்ளே போவாங்க. இந்த முறையால தள்ளுமுள்ளு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைச்சது.

தனியார் மருத்துவமனையில வேலைபார்க்குற நர்ஸ்களுக்கு தனி யூனிஃபார்ம் கொடுத்திருப்பாங்க. அதுமாதிரி, எங்களோட நர்ஸ்களுக்கு தனி யூனிஃபார்ம் கொடுத்திருக்கோம். தனியார் மருத்துவமனைக்கு நிகரா உள்கட்டமைப்பு வசதியை செய்யுறதுக்கு 4.50 லட்சம் ரூபாய்தான் செலவானது. சிசேரியன் மூலமா பிரசவம் பார்க்குறதுக்கு தேவையான ஆபரேஷன் தியேட்டர் மட்டும் இங்க இல்ல. இப்போ, அதுக்கும் நிதி ஒதுக்கீடு செஞ்சிருக்காங்க. கிராமங்கள்ல இருக்குற பெண்களுக்கு நல்ல மருத்துவ வசதியைக் கொடுக்கணும்ங்கிறதுதான் எங்களோட நோக்கம். நல்ல உள்ளங்களோட கரங்கள் எங்களோட இணைஞ்சா, கிராமப்புறங்கள்ல இன்னும் ஏராளமா மருத்துவ வசதியை எங்களால செஞ்சு கொடுக்க முடியும்!'' என்றார் நம்பிக்கையுடன்.

நல்ல உதாரணங்கள் எளிதில் பின்பற்றக் கூடியவை. ஆனால், அவற்றைச் செயல்படுத்த நல்ல மனிதர்களும் வேண்டுமே

--
நன்றி : ஜூனியர் விகடன்

Read more...

Tuesday, February 23, 2010

ஆங்கிலம் தெரிந்தவர்கள் உதவிக்கு வாருங்கள் please

அகில இந்திய மருத்துவ மேல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் தங்கள் விருப்ப இடங்களை தேர்வு செய்ய கலந்தாய்வு 23ம் தேதி ஆரம்பிக்கிறது.

அதற்கான கால அட்டவணை கொடுத்து இருக்கிறார்கள்.

கால அட்டவணை காண இங்கே செல்லுங்கள்.


அதில் சில குறிப்புகள் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார்கள்..


  • SC/ST/PH candidates should report 3 counseling days in advance of their scheduled date of
counseling but not before the date of commencing of counseling. Who have reported in advance may or may not get the seat allotted on the same day. If they do not get the seats allotted on the same day, they will be allotted the seats on the following day or dates or as mentioned in the schedule. Hence, they should make arrangements atleast for 2-3 days stay in the city of the venue.
  • If SC, ST & PH candidates fail to report in advance, he/she will be marked absent and will not be considered for the counseling even on the specified date as mentioned in the counseling schedule.
இவ்வாறு சில நாட்களுக்கு முன்பே வந்திருந்து தனது வருகையை உறுதி படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? 


ஒருவேளை சாதிச் சான்றிதழை உறுதி படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் ஒருமணிநேரமோ அல்லது அரைநாளோ முன்னால் வரச் சொன்னால் போதாதா?   அந்தச் சாதிச் சான்றிதழை வைத்துத்தான் அந்த நபர் தனது எம்.பி.பி.எஸ் படித்து இருக்கிறார். தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடிப்பதற்கு முன் சாதிச் சான்றிதழில் மெய்தன்மையை உறுதிபடுத்த சில நடவடிக்கைகள் எடுப்பார்கள். அது அரசு ஊழியர்களின் சாதிச் சான்றிதழ் மெய்பித்தல் அளவு உறுதித் தன்மை வாய்ந்தது. அது மாணவர்களாக இருக்கும்போதே தமிழக அரசு உறுதி படுத்திவிடுகிறது.

பிறகு ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்?

PH மாணவர்களுக்கும் இந்த நிபந்தனை ஏனோ..,?


இந்த நடைமுறை துவக்கம் எப்படி, எவ்வாறு ஆரம்பித்தது என்பதை தெரிந்த யாராவது சொல்லுங்கள். அடிப்படைக் காரணம் இருந்தால் சொல்லுங்களேன்.

இது நுழைவுத்தேர்வு என்பதால் அனைத்து துறைகளுக்கும் இப்படித்தான் இருக்குமோ என்று தோன்றுகிறது.

தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்

Read more...

Thursday, February 18, 2010

மாமன் மகள் சிறுநீரோடு......,

நாட்டு மருத்துவச்சி:

வயதுப் பெண் மயங்கிவிழுந்தால்  நாடி பிடித்துப்பார்ப்பார். அவருக்கு இரட்டை நாடி இருப்பதாகவும் எனவே கர்ப்பமாக இருப்பதாக கூறுவார். இது பல திரைப்படங்களில் வரும் காட்சி.

ஹைப்பர் டைனமிக் பல்ஸ் கர்ப்ப காலத்தில் தோன்றுவது தான் ஆனால் அதற்கான பல காரணங்களில் கர்ப்பம் முக்கிய இடத்தில் கிடையாது.  ஆண்களுக்கும் அவ்வகை நாடித் துடிப்பு கிடைக்கும்.

நிகழ்வு: சில மாதங்களுக்கு மாதவிடாய் தள்ளிப் போய் இருப்பதையும் வாந்தி மயக்கம் மற்றும் திருமணம் ( அது காந்தர்வ முறையாக கூட இருக்கலாம்) பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு குத்து மதிப்பாய் கொடுக்கும் வாக்கியம் அது

ஆங்கில மருத்துவரை அனுகினால்

இதே போன்று கேள்விகள் கேட்டுவிட்டு

கர்ப்பம் என்றால் அதற்குரிய அட்டைப- சிறுநீர்ப் பரிசோதனை செய்யச் சொல்வார்

பொதுவாக ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின், சர்க்கரை மற்றும் நீரில் உப்பு சர்க்கரை பரிசோதனைகள் செய்யச் சொல்வார்.

----------------------------------------------------

அவருக்கு கர்ப்பம் என்பதை உறுதியாகச் சொல்லவேண்டும். தேவையில்லாமல் கர்ப்பம் என்பதை சொல்லி மனதை காயப் படுத்திவிடக்கூடாது. கர்ப்பம் என்றால் ஆரோக்கியமாக குழந்தை வளர வழிவகைகளை ஆயாயும் அவசியத்தை உணர்ந்தவராக இருப்பார்.

கர்ப்பம் இல்லாத மயக்கம் என்றால்   மயக்கத்திற்கான காரணத்தை கண்டறிந்தே தீரவேண்டும் என்ற கட்டாயங்கள் இருக்கின்றன. அதனால் இந்தப் பரிசோதனைகள் அவசியமாகின்றன


சில நேரங்களில்
இருதயப் படம் எடுக்கச் சொல்வார்.

சிலருக்கு தைராய்டு பரிசோதனைச் செய்யச் சொல்வார்.

மொத்தத்தில் கிராம மக்களின் மனதில் செலவு வைக்கும் நபராக நினைவில் பதிக்கப் பட்டுவிடுவார்.

========================================================

உடலில் ஏதாவது அரிப்பு, தடிப்பு ஏற்பட்டால்  எம்பிபிஎஸ் மருத்துவர் , ஊசி மாத்திரைகள் போடுவார். பல் நேரங்களில் சரி ஆகிவிடும். சில நேரங்களில் அது மீண்டும் மீண்டும் தொடர் அரிப்பாக மாறிவிடுவது உண்டு.  அதற்கு சிறப்பு மருத்துவரின் பார்வை, மற்றும் பல ரத்தப் பரிசோதனைகள் செய்யச் சொல்லுவார்..

கிராம மருத்துவரிடன் சென்றால்   மிகச் சுலபமான மருத்துவம் சொல்வார். மாமன் மகளின் ( பெண்களுக்கு மாமன் மகனுடயது) சிறுநீரைப் பிடித்து  அதில் அடுப்புச் சாம்பலை பூசி விட பெரும்பாலும் திரும்ப வராது.

நிகழ்வது. அரிப்பு பெரும்பாலும் ஒவ்வாமை மற்றும் அலர்ச்சி வகையறாகவே அமையும். தீவிர பக்க விளைவாக இருக்கும் வாய்ப்பும் மறுக்க இயலாது

நடப்பது:-

ஒவ்வாமை மற்றும் தீவிர எதிர்விளைவு ஆகியவையின் போது சுரக்கும் சுரப்புகள் தானியங்கி மண்டலம் மூலம் நடக்கின்றன.  அதனால் மருந்துகள் சாப்பிட்டாலும்கூட அரிப்பு, எரிச்சல் போன்றவை இருப்பதாக நினைத்தால் இருப்படு போலவே தென்படும்

அதாவது பூஜையின்போது குரங்கை நினைக்காதே என்று சொன்னால் அதுதான் நினைவுக்கு வரும் அல்லவா அதுபோல. பல நாட்டுவைத்தியர்களும் மருந்தைச் சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே என்று சொல்வதுண்டு.

அரிப்பு போல எரிச்சல் போல இருக்கும் நிகழ்வுகளுக்கு இதுபோன்ற மாமன் மகளின் சிறுநிரைத் தடவுதல் என்பதில் உள்ளூர வெறுத்து அரிப்பே இல்லை என்ற உள்மனநிலை எடுக்கப் பட்டு அரிப்பு குணமடைந்துவிடும். மற்ற தீவிர வகை எரிச்சல் அரிப்பு போன்றவை இவ்வாறு குணமடைவது இல்லை..

===================================================================
ஒரு அடி குழல் ஒன்று

ஒரு நுனி நோயாளியின் வாயை ஒட்டி,  மறுநுணி கிராமத்து ஹீரோவின் வாயில்  சில மந்திரங்கள் ஒரு உறுஞ்சு

குழாயிலிரூந்து தக்காளித் தோல் முதல்  குரங்கு குடல் வரை ஏதாவது வரும். அதன் காரணமாகவே வயிற்று வலி , இனிமேல் வயிற்று வலி இருக்காது என்று உறுதி கொடுக்கப் பட்டு அனுப்பப் படுவார்.

அறிவியல் பிண்ணனி:  உணவுக்குழலில் தொடர்ச்சியாக இடம் பெற்றிருப்பது இரைப்பை.  இரைப்பையிலிருந்து ஒரு பொருள் திரும்பவும் உணவுக்குழாய்க்கு வர மிகக் கடுமையான அழுத்தம் இரைப்பையிலிருந்து கொடுக்கப் பட வேண்டும். உதட்டை ஒட்டி லேசாக உறிஞ்சினால் எதுவும் வர இயலாது.  இது  முழுக்க முழுக்க நடைமுறையில் சாத்தியமில்லாதது.  ஆனால் எப்படி எடுக்கிறார்கள் என்பது அறிய வேண்டுமானால் முப்பது நாட்களில் மேஜிக் புத்தகம் வாங்கிப் படியுங்கள். அந்த அரிய பொக்கிஷம் அனைத்து மாரியம்மன் கோவில் திருவிழாக்களிலும் பொருட்காட்சிகளிலும் கிடைக்கும்.

நோயாளி குணமடைய காரணம்.: பொதுவாக வயிற்று வலிக்கு நோய் தொற்றும் வயிற்றுப் புண் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. திரவ ஆகாரமும் சில நாள் உணவுக் கட்டுப் பாடும் இது போன்ற வியாதிகளிலிருந்து விடுதலை அளிக்கக் கூடும்.


இதுவே எம்பிபிஸ் மருத்துவர் என்றால் அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப் படும் வியாதிகள் அல்லது தொடர்சிகிச்சை செய்யும் வியாதிகள் இல்லை என்பதை  முதலிலேயே உறுதி படுத்தும் கடமை இருக்கிறது. ( நகர் பகுதியில் முதலிலேயே சொல்லவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றம் செல்லும் காட்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. கிராமத்தில் கட்டைப் பஞ்சாயத்து ).

எனவே  அவர் சில நாள் மருத்துவ சிகிச்சையில் கட்டுப்படவில்லை என்றால் அவர் ஸ்கேன் முதலான பரிசோதனைகள் செய்யச் சொல்வார். கிராம வாசிக்கு அலைச்சலும், பணச் செலவும் ஏற்படுத்தும்.

அதே குழல் வைத்தியருக்கு அவரது வைத்தியமுறை பலிக்கவில்லை என்றால் பெரிய இக்கட்டு ஏதும் ஏற்படாது.

================================================================


இந்த இடுகை புரியவில்லை என்றால்

மருத்துவருக்கு வேட்டு வைப்பது எப்படி?

 கிராமங்களுக்குச் செல்ல மருத்துவர்களுக்கு என்ன பயம்?

 

இடுகைகளை படித்துவிடுங்கள்


தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்

இதன் அடுத்த பகுதி விரைவில் வெளிவரும்.

Read more...

Tuesday, February 9, 2010

மருத்துவருக்கு வேட்டு வைப்பது எப்படி?

எம்.பி.பி.எஸ் மருத்துவர் கிராமத்திற்குச் செல்லும்போது அவர் சந்திக்கக் கூடிய அடுத்த கட்ட பிரச்சனை சான்றிதழ்கள் வழங்குவது.  கடந்த சில ஆண்டுகள் அரசுப் பணிக்கு வந்த இளம் மருத்துவர்கள் கிராமத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதல் பகுதி இங்கே.  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்னும்போது அவருக்கு உதவியாக எப்படியும் சிலர் அங்கே இருப்பார்கள். சமாளிக்க முடியாமல் போகும்போது காவல்துறையை உடனடியாக அழைத்துக் கொள்ளலாம். அரசு மருத்துவமனையில் பிரச்சனை செய்தால் கிடைக்கக்கூடிய தண்டனைகள் பற்றி அரசல்புரசலாக தெரியும் என்பதால் பிரச்சனை செய்பவர்கள் யாராவது சமாதானம் செய்யவந்தாலே அமைதியாகிச் சென்று விடுவார்கள்.

தனியாக கிளினிக் கிராமத்தில் ஆரம்பித்தால் இந்த பிரச்சனைகளை அந்த ஒரே ஒரு மனிதர்( எம்.பி.பி.எஸ் மருத்துவர்) மட்டுமே  சந்தித்தாக வேண்டும். காவல்துறையினரை அழைக்க நினைத்தாலும் அதற்கு நேரம் கிடைக்காது.  எல்லாம் முடிந்த பின்னர் காவல்துறையை அழைப்பதற்கு கிளினிக்கை இழுத்து மூடிவிட்டு வேறிடம் சென்று விடலாம் அல்லது அரசுப் பணியை மட்டும் பார்த்துக் கொண்டு அமைதியாக காலம் தள்ளிக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்து விடுவார்.


சான்றிதழ்களில் விடுப்புச் சான்றிதழ்கள் பெரிய பிரச்ச்னையாக இருக்காது.   பணிகளில் இருப்பவர் லேசான வயிற்று வலி என்று சொல்லிவிட்டு ஒருவாரம் விடுப்பு வேண்டும் என்று கேட்பார். பொதுவாக விடுப்பு வழங்கும் அலுவலர் விடுப்புவழங்க தயாராக இருப்பதால் இந்த சான்றிதல் அடிப்படையில் விடுப்பு வழங்கி விடுவதால் பெரும்பாலும் பிரச்சனை வராது. மாணவர்களும் அதே நிலைதான்.

ஆனால் நோயாளியைப் பார்க்காமல் மருத்துவ சான்றிதழ் வழங்கி தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்ட மருத்துவர்களும் இருக்கிறார்கள். இந்த சான்றிதழ்கள் பற்றி பிறிதொரு இடுகையில் பார்க்கலாம்.

கிராமத்து மருத்துவர்களின் பிரச்சனைகளை மட்டும் இங்கு பார்க்கலாம்.  பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள்.

பிறப்புச் சான்றிதழ்கள்: இவை பிரசவம் பார்த்த மருத்துவர் பதிவு செய்ய வேண்டியது அவரின் கடமை என்பதால் இது ஒரு பிரச்சனை அல்ல.

இறப்புச் சான்றிதல்:

இயற்கை மரணத்திற்கு அந்த கிராமத்தில் இருக்கும் பிறப்பு இறப்பு பதிவாளர் பதிந்து விட்டால் அவரே கொடுத்துவிடுவார். ஆனால் நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தால், அல்லது இளம் வயதில் மரணம் அடைந்துவிட்டால் மருத்துவ சான்றிதழுடன் வந்தால் தான் உடனே கொடுப்பதாக சொல்லிவிடுவார். ( மருத்துவர் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு பிறப்பு இறப்பு பதிவாளர் சந்திக்கும் பிரச்சனைகளும் சளைத்தவை அல்ல).

நோயாளி இறந்தால் இறப்பிற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டிய பொறுப்பு மருத்துவருக்கு உண்டு.  இதில் தவறான தகவல் கொடுப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால்  நோயாளியைப் பார்க்காமல் இறந்து போனவரை பற்றி அதுவும் அடக்கம் செய்யபின் எப்படி சான்றிதழ் கொடுக்க முடியும்? ஆனால் நிர்பந்தம் கடுமையாக இருக்கும்.

சில நோயாளிகளை இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் மருத்துவர் பார்த்திருப்பார்.  மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்திருப்பார். அழைத்து சென்றிருந்தால்  நோயாளி பிழைத்திருக்கக் கூடும்.  ஆனால் நோயாளியை அழைத்துச் செல்ல சூலம் பார்த்து , கிழமை பார்த்து - திங்கள் பயணம் திரும்பாப் பயணம்- காலம் தாழ்த்த நோயாளி இறந்திருப்பார்.

இப்போது சான்றிதழ் கேட்டு நிற்பார்கள். மருத்துவ சான்றிதழில் உடனடிக் காரணம் என்று என்ன போட முடியும்? அந்த நேரத்தில் என்ன நடந்திருக்கக்கூடும் என்று மருத்துவரால யூகித்தத்தான் முடியுமா? நீங்கள்தானே நோயாளியைப் ( சில நிமிடங்கள்தான் பார்த்திருப்பார்) பார்த்திருக்குறீர்கள் .அதனால் கொடுத்தே தீர வேண்டும் என்று நிர்பந்தப் படுத்துவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.    சில நேரங்களில் வெகு நாட்களாக படுத்த படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிக்கு குளிர்ந்த நீரால் குளிப்பாட்டுதல் நடக்கும். மிக்குளிர்ந்த நீர் தலைவழியாக வேகமாக ஊற்றப் படும்போது படுத்த படுக்கையில் இருக்கும் நோயாளி மரணம் அடைந்துவிடுவார்.( பிரேதப் பரிசோதனை செய்தால் இதை கண்டறிய முடியும்) இதில் தப்பி விட்டால்  நோயாளிக்கு நூறு ஆயுசாம்.

இதற்கும் அடக்கம் செய்து சில நாட்கள் கழித்து வந்து கேட்டால் என்ன செய்ய முடியும்.

சில நேரங்களில் காதல் திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டு ஓடியவர்களுக்கு கரும காரியங்களை முடித்துவிட்டு ஊரின் முக்கிய சில வெள்ளை வேட்டிகளுடன் இறந்து போனதாக பதிவு செய்யச் செல்லும்போது அவர் மருத்துவ சான்றிதழ் கேட்டு அனுப்பி விடுவார். (சொத்துப் பிரச்சனைகளுக்கு உதவும் ) இங்கு கிராமத்தில் கிளினிக் வைத்திருக்கும் எம்.பி.பி.எஸ் மருத்துவர்தான் மாட்டுவார். இது போன்ற பிரச்சனைகளில் சாம பேத தான தண்ட வழிகள் பிரயோகம் ஆவது உண்டு.

கிராமத்து ஆட்களிடம் அடிவாங்க  யார்தான் தயாராக இருப்பார்கள்.

வயதுச் சான்றிதழ் 

முதியோர் உதவித் தொகை மாநில அரசால் வழங்கப் பட்டு வருகிறது. வயதானவர்களை சிரமப் படுத்த வேண்டாம் என்ற நோக்கத்தோடு  அவரது வாய்மொழியாகச் சொல்லும்  வயதும் உடல் தோற்றமும் ஒத்திருப்பதாக மருத்துவர் சான்றழித்தால் போதும் என்ற நடைமுறை இருக்கிறது.

கிராமத்தில் சில புரோக்கர்கள் இருப்பார்கள். அறியாமையால் இருக்கும் மக்களிடம் அரசு அலுவலகங்களில் வேலைகளை முடித்துத் தருவதாகக் கூறி, சில நேரங்களில் முடித்தும் கொடுத்து காசு பார்த்துவருவார்கள். கிராம மக்களுக்கு நகரங்களில் சுற்றுவதற்கு இவரது உதவி மிகவும் அத்தியாவசியமாக இருக்கும்.  இவர்களில் சிலருக்கு பணத் தேவை என்று வந்து விட்டால்  அந்த ஊரில் உள்ள முதியவர்களுக்கு   விண்ணப்பங்களை வழங்கி விட்டு வயதுச் சான்றிதழ்களுக்காக மருத்துவரிடம் அனுப்பி விடுவார்கள் .   அதில் தகுதி உள்ளவர்களுக்கு சில மாதங்கள் கழித்துவரும். சிலர் காத்திருப்பு பட்டியலுக்குச் செல்வார்கள். சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டிருக்கும். ஆனால் புரோக்கருக்கு பணத்தேவை வரும்போதெல்லாம் விண்ணப்பங்கள் வழங்கப் படும்.  கையெழுத்திட்ட காரணத்தால் அந்த வயதானவர்கள் மருத்துவரிடம் வந்து திட்டிக் கொண்டே செல்வார்கள்.  மக்களின் அறியாமையே அயோக்கியர்களின் பலம். தினமும் திட்டு வாங்குவதற்கு பயந்து கொண்டே அந்த மருத்துவர் கிராமத்திலிருந்து எஸ்கேப்..,

அதே போல பதினெட்டு வயது ஆகாத பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு  பதிவு செய்வதற்காகவும்.  அரசின் நலத்திட்டங்களில் உதவித் தொகை பெறுவதற்காகவும் பதினெட்டு வயது நிரம்பியதாக சான்று கேட்டும் மிரட்டல்களைச் சந்திக்க வேண்டி வரும்.  மருத்துவர் கொடுத்துவிட்டால் அவர் மேல் மைனர் பெண் கடத்தலுக்கு உதவியது, கற்பழிப்புக்கு உதவியது, குழந்தை திருமணத்தை ஆதரித்தது போன்ற பிரிவுகளில் வழக்குத் தொடர முடியும். 

அப்புறம் எங்கே அவர் அந்த ஊர் பக்கம் தலைவைத்துப் படுக்கப் போகிறார்?

இதையெல்லாம் சமாளித்து அந்த மருத்துவர் கிராமத்தில் தொடர்ச்சியாக கிளினிக் நடத்தி வருகிறாரா? அவருக்கு அடுத்து வரும் பிரச்சனைகள் அடுத்த இடுகையில்..,


தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்

Read more...
அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP